பெண் காவல் துறையினரையும் காவல்துறை உயர் அதிகாரிகளையும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட பல மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் கைது செய்து, காசல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இம்மாதம் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகார் அடிப்படையில் விசாரணை செய்வதற்கு நேற்று கோவை மத்திய சிறையில் இருந்து 10 பெண் காவலர்கள் பாதுகாப்புடன் வாகனம் மூலம் திருச்சி நீதிமன்றம் வந்தடைந்தார். மதியம் திருச்சி 3 வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடுவர் ஜெயபிரதா முன்னிலையில் விசாரனை தொடங்கியது. கிட்டதட்ட 5.30 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.




சவுக்கு சங்கர் தரப்பு விளக்கம்.. 


கோவையில் இருந்து தன்னை திருச்சி அழைத்து வரும் வழியில் 5 பெண் காவலர்கள் என்னுடைய வலது கையை முறுக்கி கடுமையாக தாக்கினர் என திருச்சி 3 வது முதன்மை குற்றவியல் நடுவர் ஜெயபிரதாவிடம் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே, தன்னுடைய கை உடைக்கப்பட்டு அதற்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், எனக்கான மருந்து, மாத்திரைகளை கூட வழங்காமல், தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாகவும், என்னை தாக்கும்போது அதனை புகைப்படம், வீடியோ எடுத்து காவலர்கள் இருக்கும் வாட்ஸ் குழுவில் பகிர்ந்துக் கொண்டதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும், தனக்கு கை, உடம்பெல்லாம் வலிப்பதாகவும் தனக்கு உடனடியாக சிகிச்சை வேண்டும் என்று சவுக்கு சங்கர் கேட்டுக்கொண்டதையடுத்து, அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு முழு உடல்பரிசோதனை செய்யபட்டது. அதில் அவரது உடலில் எந்தவிதமான உள்காயங்களும் இல்லை, வேறு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவ அறிக்கையில்  தெரிவிக்கபட்டது. மேலும் எனக்கு போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது என்று நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கேட்டுக்கொண்டார். 




பெண் காவலர்களின் விளக்கம்..


நீதிமன்ற நடுவர் மீண்டும் வழக்கை விசாரிக்க தொடங்கினார். அப்போது குற்றவாளி சவுக்கு சங்கர் உடன்  கோவையில் இருந்து வாகனம் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர்களை அழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது பெண் காவலர்கள் நாங்கள் அவர் மீது தாக்குதல் நடத்தவில்லை அவர் வேண்டுமென்றே பொய் கூறுகிறார். மாறாக அவர் திருமணமாகாத என்னிடம் எனது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை கேட்டார். அது மட்டும் அல்லாமல் இனிமேல் நீங்கள் என்னை வீடியோ எடுத்தால் சமூக வலைதளங்களில் நான் உங்களைப் பற்றி  வீடியோ வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், மேலும் பெண் காவலர்களை அசிங்கப்படுத்தும் விதமாக பதிவுகளை பதிவிடுவேன் என்றும் எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினார் என்று தெரிவித்தனர்..


இதனைத் தொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிமன்ற நடுவர் வியாழன் கிழமை ( இன்று)  மதியம் தீர்ப்பு வழங்குவதாக நேற்று  தெரிவித்தார். அதுவரை குற்றவாளி சவுக்கு சங்கர் திருச்சி மாவட்ட லால்குடி கிளை சிறையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.




திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்.  


இன்று காலை 11.00 மணி அளவில் திருச்சி மாவட்டம்,  லால்குடி கிளை சிறையில் இருந்து பெண் காவலர்கள் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் வாகனம் மூலம் திருச்சி நீதிமன்றம் வந்தடைந்தார். மதியம் 1 மணி அளவில் சவுக்கு சங்கர் வழக்கின் மீது  விசாரணை தொடங்கியது. 


அரசு தரப்பு வழக்கறிஞர் ஹேமந்த் பேச்சு.. 


சவுக்கு சங்கர் தனியார் youtube சேனலில் பெண் காவலர்களையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இந்த வீடியோவால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இருக்க கூடிய  பெண்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் பெண்களை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துகளை தெரிவித்தது சட்டப்படி குற்றம் என்றார். 


மேலும், எதிர்தரப்பு சவுக்கு சங்கருக்கு போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்பு அவருக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அந்த வழக்கில் சில உண்மைகளை கண்டறிவதற்காக அவர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார். அது போலவே இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக யார் செயல்படுகிறார், இவர் இதுபோன்று தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள், எதற்காக அவதூறுகளை பரப்ப வேண்டும், என்ற கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.  அதே சமயம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் youtube சேனல் உரிமையாளரும், ஆசிரியரும் பெலிக்ஸ் ஜெரால்ட் அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்தலில் சில முக்கிய ஆவணங்களும், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள சவுக்கு சங்கர் போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.




சவுக்கு சங்கர் - வழக்கறிஞர் கென்னடி பேச்சு.. 


தனியார் youtube சேனலில் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ இனிமேல் அளிக்க முடியாது. அதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்பு கோவை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கியுள்ளது. அதேசமயம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் youtube சேனல் உரிமையாளரும், ஆசிரியரும் பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று. 


இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கில் எதற்காக போலீஸ் கஸ்டரி வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் பேர் சவுக்கு சங்கர் மீது புகார் தெரிவித்து இருந்தால், ஒரு லட்சம் முறை நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா? ஆகையால் தமிழ்நாடு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள புகார்களை ஒரே வழக்காக எடுத்துக்கொண்டு தவறுகள் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டு விட்டது. 


ஆகையால் சவுக்கு சங்கருக்கு போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது. ஏற்கனவே சவுக்கு சங்கரின் உடல்நிலை சரியில்லை, கை உடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று வாகனத்தில் வரும் போதே அவர் பெண் காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதையும் தாண்டி போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்தால் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் கஸ்டடி வழங்கக்கூடாது என நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.




சவுக்கு சங்கர் வழக்கை விசாரணை செய்த நீதிமன்ற நடுவர் ஜெயபிரதா தீர்ப்பு ..


யூடியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் 7 நாள் காவல் கேட்டிருந்த நிலையில் , ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும். அதே சமயம் நாளை மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்ற நடுவர் ஜெயபிரதா உத்தரவு பிறப்பித்தார்.