தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தும் சனாதான, மதவெறி வன்முறை, வெறுப்புணர்வுக்கு  எதிரான பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். இதன்பின் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்புரையாற்றுகையில்.. அனைத்து இஸ்லாமியரையும் நேசிக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. மேலு வருகின்ற 2024 நாடாளுமன்ற  தேர்தலில் ஆட்சி பீடத்தில் இருந்து பாஜகவை அகற்ற வேண்டும். மேலும் ஆர் எஸ் எஸ், சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.


இந்துக்களை வன்முறையாளர்களாக மாற்றும் வேலையை தான் இவர்கள் செய்து  கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நோக்கம் நிறைவேற கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறார்கள்.  சிறுபான்மையினரால் பெரும்பான்மையினர் எப்படி பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள் இது அபத்தமான பொய். இந்துக்களை மூளைச்சலவை செய்கிறார்கள், முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கிறார்கள். வெறுப்பு அரசியல்   செய்ய அவதூறுகளை பரப்புகிறார்கள். குறிப்பாக  மதமாற்றம், புனித பசு, லவ் ஜிகாத் இவற்றை கையில் எடுத்துக் கொண்டு வன்முறை தூண்டுகிறார்கள்.




மேலும் இந்துக்களை அணி திரட்டுவதற்காக முஸ்லிம், கிறிஸ்தவர்களை ஒடுக்குகிறார்கள். இந்துத்துவாவை எதிர்த்தால் இந்துவை எதிர்ப்பதாக சொல்கிறார்கள். இந்து என்ற வார்த்தையை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். இந்து என்பது வேறு ,இந்துத்துவா என்பது வேறு என சொல்கிறார்கள். ஆனால்  பாஜக அரசியல் திட்டத்திற்கு வைத்த பெயர் தான் இந்துத்துவா ஆகும். இதன் மூலம் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அரசியல் செய்கிறார்கள்.  மிகவும் ஆபத்தான கொள்கையை கொண்ட இயக்கம் ஆர்எஸ்எஸ், பாஜக. ஒரு இறையாண்மை உள்ள ஜனநாயக குடியரசு உருவாக்கப் போகிறோம். அந்த அரசு ஒரு நீதியை உருவாக்கும் அது அரசியல் நீதி, பொருளாதார நீதி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்.


ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பது நாம் சுதந்திரத்தை பறிப்பதாகும். நாம் உருவாக்க போகும் அரசு மத சார்பற்ற அரசாக இருக்க வேண்டும் , அந்த நோக்கத்தில் தான் ராகுல் காந்தியும் செயல்பட்டு வருகிறார். ஜாதி சான்றிதழ்களே வேண்டாம் என மோடி சொல்லட்டும் அப்போது அவர்களுடன் நாங்கள் ஒன்று சேருகிறோம். இந்து சனாதானத்தில் கோட்பாடு இல்லை, பைபிள் படிக்கிறவன் கிறிஸ்தவன் ஆகிறான், குர்ஆன் படிக்கிறவன் முஸ்லிம் ஆகிறான் , ஆனால் ஜாதி வெறி உள்ளவன் இந்துவாக மாறுகிறான். ஆபத்தான கொள்கையை பேசக்கூடியவர்கள் கையில் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது 2024 தேர்தலில் பாஜக வை  தூக்கி எறிய வேண்டும் . மேலும் மோடி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கிறார் அது ஒருபோதும் நடக்காது என தெரிவித்தார்.