பொதுவாக பறவைகள் உணவு தேடியும் தட்பவெப்ப சூழ்நிலை மாறுபாடுகளை எதிர்கொள்ளவும் பல்வேறு நீர் நிலைகளை தேடி ஆண்டுதோறும் வலம் வருகின்றன. பல்லாயிரம் மயில் தூரத்தைக் கடந்து பறவைகள் வலசை போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று உணவு தேடல் மற்றொன்று தாங்கள் வாழும் இடத்தில் குளிர்காலத்தில் கட்டும் குளிரில் இருந்து தப்பிக்க நீண்ட தொலைவுக்கு நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும், பறவைகளை தான் வெளிநாட்டுப் பறவைகள் என்கிறோம். இவை இனப்பெருக்கத்திற்கு மீண்டும் தங்கள் தாய் நிலம் திரும்புகின்றன. தற்போது திருச்சி மாவட்டம்,  கிளியூருக்கு ஐரோப்பிய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் வழக்கமாக வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


தற்போது திருச்சி கிளியூர், திருவரம்பூர், நேரு மெடிக்கல் காலேஜ்,  அரசங்குடி ஏரி வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்ற இடங்களில் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வலசை வந்துள்ளன. பறவை ஊசி வால் வாத்து, நீலச்சிறவி வாத்து, ஆண்டி வாத்து, கருவால் மூக்கன், பழுப்புக் கீச்சான்கள், உள்ளிட்ட பறவைகள் வந்து குவிந்துள்ளன. இதுபோல உள்நாட்டுக்குள் குறைந்த தொலைவு வலசை செல்லும் பறவைகளான கூழைக்கடாக்கள், நத்தைக்கொத்தி நாரைகள், அரிவாள் மூக்கன்கள், மஞ்சள் மூக்கு நாரை, மீசை ஆலாக்கன், தகைவிலான்கள், குள்ளத் தாராக்கள், உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வலசை வந்துள்ளன.




தமிழகத்தில் பறவைகள் வலசை வரும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது முக்கியம். மேலும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை நாம் இன்னும் அதிகப்படுத்த வேண்டும். பறவைகள் தங்களது நலனுக்காக வலசை போனாலும், இவற்றால் மகரந்தச் சேர்க்கை, கழிவுகளால் மண்வளம் பெருகுதல், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தல், விதைகளைப் பரப்புதல் மூலம் தாவர வகைகள் பரவுதல் என பல்லுயிர் பெருக்கம் நிலை பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. எனவே வலசை போகும் பாதைகள் நீர் நிலைகள், தங்குமிடங்கள் ,வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் தேவையானது . தற்போது கிளியூர் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றுவது தொடர்பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பறவை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.




மேலும் தமிழ்நாட்டில் பறவைகள் தங்குவதற்கும், இளைப்பாறுவதற்கும் , உணவு உண்ணுவதற்கும் ஏற்ற இடங்கள் பல உள்ளது. அவற்றை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும். ஒரு சில இடங்களில் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமான நீரால் அந்த குளங்கள், செடிகள் அனைத்தும் அழிந்து வருகிறது . ஆகையால் நாம் இயற்கை வளத்தை பெருக்குவதற்கும், அழிந்து வரும் ஏரிகள், குளங்களையும் பறவைகள் செல்லக்கூடிய நீர் நிலைகளை தூய்மையாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.