தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கபடாத மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் மிகவும் அவதிபட்டு வருகிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. மேலும் சில இடங்களில் இரவு நேரங்களில் முழுமையாக மின்வெட்டு ஏற்படுவதாகவும், பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அண்ணாபண்ணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வயலோகம், வேளாம்பட்டி, முதலிப்பட்டி, நிலையபட்டி, மாங்குடி, அகரப்பட்டி, மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிப்பின்றி அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது.  இதனால் பகல் நேரங்களில் பணி செய்ய முடியாமலும், இரவு நேரங்களில் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாகவும், தங்கள் பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டை சரி செய்யாத மத்திய, மாநில அரசு நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று வயலோகத்தில் உள்ள அண்ணா பண்ணை துணை மின்நிலைய அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 



 

இதனை தொடர்ந்து  மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்தும், தமிழக அரசு தடையின்றி மின் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் எங்கள் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது எனவும், இதனால் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிபட்டு வருகிறார்கள்.

 

பல முறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் மின் நிலைய அலுவலக வளாக சுவற்றில் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுடுகாட்டில் படுத்து உறங்குவதற்காக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சுபா மற்றும் அண்ணாபண்ணை மின்வாரிய அலுவலர் அம்பிகாபதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். 

 



 

தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இனி வரும்  காலங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம் சரி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மின்வாரிய அலுவலகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலிம் பொதுமக்கள் இது போன்று போராட்டங்களில் ஈடுபடகூடாது என காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.