திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை ஊராட்சியில் உள்ள சரோஜா  திருமண மண்டபத்தில் அதிமுக கழக அமைப்பு தேர்தல் திருச்சி புறநகர் மாவட்ட தெற்கு மாவட்ட கழக செயலாளர், மாவட்ட கழக நிர்வாகிகள்,பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த கட்சி தேர்தலுக்கு தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு மாநில இணைச் செயலாளர் லியாக்கத் அலி கான் ஆகியோர்  தேர்தல் நடத்தும் அலுவலராக கட்சி தலைமை நியமித்தது.






ஆனால் லியாகத் அலிகான் மட்டுமே வந்திருந்து வேட்புமனுக்களை பெற்றனர். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்பியும் தற்போதைய மாவட்ட கழகச் செயலாளருமான குமாரை எதிர்த்து அம்மா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் ஜி.டி.கிருஷ்ணன்,  எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சன்.பிரபாகரன், அதிமுக மாவட்ட கழக இணைச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்தனர்.





இதில் அம்மா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் ஜி.டி.கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தபோது பா. குமாரின் ஆதரவாளர்கள் அவரை வேட்புமனு தாக்கல் செய்யாத வகையில் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஜி.டி.கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தபோது திருமண மண்டபத்தில் இருந்த பிளாஸ்டிக் சேர்களை எடுத்து கூட்டத்தில் வீசினர்.  இதனால் மாவட்ட செயலாளர் குமார் ஆதரவாளர்களுக்கும் மாவட்ட கழக செயலாளர் குமாருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக கட்சியினர் ஒரு பிரிவாகவும் பிரிந்து பயங்கர சத்தத்துடன் ஒருவரை ஒருவர் தாக்க முயன்றனர். இந்நிலைமை விபரீதம் அடையும் முன்னே சம்பவத்திற்கு இடத்திற்கு வந்த லால்குடி காவல்துறையினர்  இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை என்பதால் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக டி.ஜி.கிருஷ்ணனின்  ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.