தாய் தனது குழந்தைக்கு பிறந்த ஒரு வருடத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும். இதனால் கைக்குழந்தைகளோடு பயணம் செய்யும் தாய்மார்கள், குழந்தைக்கு தேவையான நேரத்தில் தாய்ப்பாலை வழங்குவார்கள். இவ்வாறு பொது இடங்களில் வைத்து தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் சற்று சிரமம் அடைந்தனர். இதேபோல பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பஸ் நிலையங்களில் தாய்மார்களின் நிலை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர்கள் மறைவாக தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றானது தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆகும். அதாவது பஸ் நிலையங்களில் தாய்மார்கள் ஒரு அறையில் இருந்து எந்தவித சிரமமும் இல்லாமல் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் இத்திட்டத்தை தொடங்கினார். இத்திட்டம் பெண்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இதற்காக பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை என தனியாக ஒதுக்கப்பட்டது. அந்த அறைகளில் பெண்கள் அமர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் இருக்கைகள் போடப்பட்டன. மேலும் மின் விளக்குகள், மின் விசிறிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டது.






புதுக்கோட்டையை பொறுத்தவரை புதிய பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை என மதுரை பஸ்கள் நிறுத்துமிடத்தில் உள்ளது. இந்த அறையை தினமும் சராசரியாக 10 பெண்கள் வரை தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வந்து செல்வதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். தாய்மார்கள் பாலூட்டும் அறையின் உள்ளே பெண்கள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அறையின் ஓரத்தில் பழைய பதாகை பலகைகள் போட்டு கிடந்தன. கைகள் கழுவும் தண்ணீர் குழாய் மட்டும் பராமரிப்புமில்லாமல் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்பதே அங்கு வந்தவர்களின் கோரிக்கையாகும். அறையின் முகப்பு பகுதியின் அருகே சற்று சுத்தம் செய்து பராமரித்தால் மேலும் நன்றாக இருக்கும். மற்றப்படி தாய்மார்கள் பாலூட்டும் அறை தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.




மேலும் விராலிமலை சந்தைப்பேட்டை அருகே புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கு 11 கடைகள் ஊராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு அறையை பாலூட்டும் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு அதனை கைக்குழந்தையுடன் விராலிமலைக்கு வந்து செல்லும் தாய்மார்கள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி வந்தனர். புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் அதன் பிறகு இதுவரை செயல்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி  ஒருவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பஸ் நிலையத்திற்குள் ஆரம்ப காலத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது செயல்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. இதனால் தாய்மார்கள் மிகவும் கஷ்டபட்டு வருகிறார்கள். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலூட்டும் அறையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.