விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், சிலைகள் ஊர்வலம் தொடர்பாகவும் விழாக்குழுவினருடன் போலீசார் ஆலோசனை கூட்டத்தை  பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்தினர். கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சஞ்சீவ்குமார் (பெரம்பலூர்), ஜனனிபிரியா (மங்களமேடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் பேசுகையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலையை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்தும், அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையிடம் இருந்தும், நெடுஞ்சாலை மற்றும் வேறு துறைக்கு சொந்தமான இடமாக இருப்பின் தொடர்புடைய அலுவலர்களிடம் இருந்தும், தடையின்மை சான்று பெற்று வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.




நிறுவப்படவுள்ள சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டவையாக மட்டும் இருக்க வேண்டும். உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. விநாயகர் சிலைகளுக்கு மேற்கூரைகளை இரும்பு சீட் அல்லது சிமெண்டிலான சீட் கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும். தென்னங்கீற்று போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விழாக்குழுவினர் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை ஆகியவை அருகே விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்தக்கூடாது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை மதியம் 12 மணிக்குள் தொடங்க வேண்டும். ஊர்வலத்தின்போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. சிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். 




மேலும் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழியில்தான் ஊர்வலமாக செல்ல வேண்டும். விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், சிலைகள் ஊர்வலம் தொடர்பாகவும் அரசு வகுத்துள்ள வழிமுறைகளை விழாக்குழுவினர் பின்பற்ற வேண்டும், என்றார். மேலும் அவர் விழாக்குழுவினர் சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினார். மேலும் அரசு கூறிய விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக சிலைகளை வைப்பதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கட்டாயம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து கூடுதலாக காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசு கூறிய விதிமுறைகளையும், மாவட்ட நிர்வாகத்தினுடைய விதிமுறைகளையும் மீறினால் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன் (பெரம்பலூர்), மோகன்ராஜ் (பாடாலூர்), பாலசுப்பிரமணியன் (அரும்பாவூர்), கண்ணதாசன் (குன்னம்), நடராஜன் (மங்களமேடு), சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரும் விழாக்குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகாக்களில் இருந்து விழாக்குழுவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண