முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த முழு அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பிறகுதான் அதில் கருத்து கூற முடியும். அவர் என்ன விசாரணை மேற்கொண்டார் என்பது தெரியாது. ஆகையால் அது குறித்து கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது. அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் இணைக்க வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றலாமா? வேண்டாமா? என்பது குறித்து தொண்டர்களின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடு. அது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. எனக்கு முதலமைச்சர் ஆவதற்கோ, கட்சி தலைவராவதற்கோ ஆசை இல்லை என்று கூறும் ஓ.பன்னீர்செல்வம், எதற்கு இவ்வளவு பிரச்சினை செய்கிறார். தலைமை கழகத்துக்குள் புகுந்து அலுவலகத்தை நொறுக்கி, கம்ப்யூட்டர், அறைகளை சேதப்படுத்தியது எதற்காக?. தேவையில்லாமல் ஏன் பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்றார். 




மேலும், 8 வழிச்சாலை அமைக்க யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலத்தை கையகப்படுத்தி தான் சாலை அமைக்க முடியும். இன்று இருக்கிற அதிகாரிகள் தான் அன்றைக்கும் இருந்தார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஒரு கருத்து, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கருத்து என்பது தான் தி.மு.க.வின் திராவிட மாடல். ரூ.10 ஆயிரம் கோடியில் தமிழ்நாட்டுக்கு வருகிற திட்டம் இவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது என்ன கூறுகிறார்கள். அந்த திட்டம் வருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்கிறார்கள். அப்போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த அனைத்து கட்சிகளும் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது கூட்டணி கட்சிகள் மவுனம் காத்து வருகிறார்கள். இதெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்ட சதி செயல். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் வந்துவிட்டால் அவர்களுக்கு பெயர் கிடைத்து விடும் என்ற கெட்ட எண்ணத்தில் தான் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள்.




அ.தி.மு.க. என்பது தொண்டர்களின் கட்சி. தொண்டர்களின் விருப்பத்தை தான் நாங்கள் செயல்படுத்துவோம். மக்களுக்கு அ.தி.மு.க. மீது தவறான கருத்து இருந்தால் நான் செல்லுகிற இடங்களுக்கு இவ்வளவு மக்கள் திரளுவார்களா?. எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அ.தி.மு.க. தனித்து நிற்கும் இயக்கம். அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் தான் பயணித்து கொண்டு இருக்கிறோம். காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் ரூ.14 அயிரம் கோடியில் தொடங்கி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது என்பதற்காகவே வேண்டுமென்றே அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். எங்களிடம் கோபம் இருந்தால் அதை எங்களிடம் காட்டுங்கள். மக்களின் திட்டங்களை புறக்கணிப்பது நியாயமல்ல. ஆறுகுட்டி போல வேறு எந்த குட்டியும் இனி எங்களை விட்டு போகாது. மக்களிடம் வாக்குறுதிகள் கூறியதை நிறைவேற்ற முடியாததால் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களை சந்திக்க முடியவில்லை. அதனால் கூட்டங்களில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்கள்.