தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சர்வதேச திருநங்கைகள் தின விழா பெரம்பலூரில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்  ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மணி முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர்  ஸ்ரீவெங்கடபிரியா பேசும்போது கூறியது.. தமிழகத்தில்  திருநங்கைகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து திட்டங்களையும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக பொதுமக்களுக்கு இடையூர் விளைவிக்கும் வகையில் சிலர் நடந்துக்கொள்கிறார்கள் என்ற தகவல்களும் வருகிறது. ஆகையால் அனைத்து திருநங்கைகளும் பல்வேறு திறமைகள் உள்ளன.  மேலும் தவறான தொழில், செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் நல்வழிக்கு திரும்பவேண்டும் என்பதே அனைவரின் எண்ணம் ஆகும். 

 



 

குறிப்பாக உங்களில் பலர் தனித்திறமைகளை கொண்டுள்ளீர்கள். உங்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.  மேலும் சுயதொழில் தொடங்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். அதுமட்டுமல்லாமல் திருநங்கைகள் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். மேலும்  விரைவில் உங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு உதவ பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக இருக்கிறது. பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்களை திருநங்கைகளுக்கு வழங்க போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்துள்ளார். எனவே, ஆர்வமுடைய திருநங்கைகள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 



 

அதனைத்தொடர்ந்து  நெகிழிப்பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலான திட்டமான மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் கீழ் மஞ்சப்பைகளையும், மரக்கன்றுகளையும், 5 திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டைகளையும், திருநங்கைகள் சுயதொழில் செய்வதற்காக மானிய தொகையாக 6 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். மேலும் 2021-22-ம் ஆண்டிற்கான பெரம்பலூர் மாவட்ட சிறந்த திருநங்கையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை ராணியம்மாவுக்கு விருதையும், கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியர்  ஸ்ரீவெங்கடபிரியா வழங்கி பாராட்டினார். முன்னதாக திருநங்கைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் பெரம்பலூர் நகர் மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் குமரிமன்னன், மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா மற்றும் அரசு அலுவலர்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.