திருச்சி மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் உடல் உறுப்பு தானம் அதிக அளவில் நடக்கிறது. திருச்சியில் 55 வயதில் மூளைச்சாவு அடைந்து நபரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் செலுத்தி உள்ளனர். இந்த மருத்துவ குழுவினரை பாராட்டுகிறேன் என்றார். தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதுவரை 60 லட்சம் பேர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதில் 24 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 16.50 லட்சம் பேருக்கு நீரிழிவு வியாதியும் உள்ளது. மேலும் 12.10 லட்சம் பேருக்கு நீரிழிவு உயர்ரத்த அழுத்தமும் சேர்ந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வியாதிகளுக்கு ஆட்பட்டு உள்ளனர் என்றார்.
தமிழகத்தில் இதுவரை இ எக்ஸ் போன்ற வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை. பிஏ2 ஒமிக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது. மரபியல் ரீதியாக நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் எடுத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு இன்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. தனியார் மருத்துவமனியில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பு பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.