அரியலூர் மாவட்டத்தில் 2 பெண்கள் கொலை வழக்கில் ஒருவர் கைது

அரியலூர் மாவட்டம் ,பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் கொலை வழக்கில் ஒருவர் கைது. காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

Continues below advertisement

அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த கலைமணியின் மனைவி மலர்விழி(வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மனைவி கண்ணகியும்(40) கடந்த 22-ந் தேதி சமையலுக்கு காளான் பறிப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்கு சைக்கிளில் சென்றனர். அவர்கள் சைக்கிளை கழுவந்தோண்டி செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு, வயல் பகுதிக்கு சென்று காளான் பறித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த கலைமணி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வயல்வெளியில் தேடியுள்ளனர். அப்போது மலர்விழியும், கண்ணகியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆலோசனையின்படி ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், சூர்கத்தி (அரிவாள்), சுளுக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி, அரிவாளால் வெட்டப்பட்டும், 2 பேரின் கழுத்துப் பகுதியில் சுளுக்கியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்ததாக போலீசாரால் கூறப்படுகிறது.

Continues below advertisement

மேலும், கண்ணகியின் செல்போனை காணாததால், அவர் செல்போன் மூலம் யார்? யாரிடம் பேசினார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கண்ணகி முதலாவதாக அவரது மகன் விக்னேஸ்வரனுக்கும், இரண்டாவதாக தனது கொழுந்தனாரின் மனைவி செல்விக்கும் போன் செய்ததும், அவர்கள் போனை எடுக்காததால், தனது அண்ணன் மகனுக்கு போன் செய்ததும் தெரியவந்தது. அவரது அண்ணன் மகன் போனை எடுத்து பேசியபோது கண்ணகி பேசியது ஒன்றும் புரியாததால் இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் போன் செய்தபோது, கண்ணகியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று திடுக்கிடும் தகவல் வெளியானதால் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் சுளுக்கி வைத்து வேட்டையாடுபவர்கள் யார்? என்பது பற்றி துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில், கழுவந்தோண்டியை சேர்ந்த பால்ராஜ்(40) என்பவர்தான் முயல் வேட்டைக்கு செல்வது வழக்கம் என்பது தெரியவந்தது. அதில் இருந்து நூல் பிடித்தவாறு விசாரணையை தொடங்கிய போலீசார், இந்த சம்பவம் நடந்த பகுதி வழியாக முயல் வேட்டைக்கு சென்றவர்களையும், கழுவந்தோண்டி பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட மேலும் சிலரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குறிப்பாக பால்ராஜிடம் தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில் 2 பெண்களையும் கொலை செய்தது பால்ராஜ்தான் என்பது தெரியவந்தது.


இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 2 பெண்களையும் அவர் மட்டும் தனியாக கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்கேனும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் 2 பெண்களையும் கொலை செய்தது எப்படி? என்பதை செய்து காட்டினார். மேலும் பால்ராஜ் தனது துருப்பிடித்த துப்பாக்கியை அப்பகுதியில் உள்ள ஏரியில் தூக்கி வீசியதாக கூறினார். இதையடுத்து ஏரியில் இருந்து அந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். சிறிது தூரத்தில் பால்ராஜ் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து சுளுக்கி மற்றும் அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர். பால்ராஜிடம் இருந்து மலர்விழியின் தாலிச்சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola