திருச்சி மாவட்டம், திருவெறும்பூர  பகுதியில  இயங்கி வரும் என்.ஐ.டி. மாணவிகள் விடுதியில் மாணவிகளின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று முந்தினம் காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர்.


அப்போது அங்கு விடுதியில் உள்ள ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அச்சமயத்தில் சாதுரியமாகச் சுதாரித்துக் கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட, அங்கிருந்த மற்ற மாணவர்கள் கதிரேசனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.


மேலும், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில்  திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.


இதனைத் தொடர்ந்து, அலட்சியமாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து என்.ஐ.டி. வளாகத்தில் இரவும் முதல் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.


மேலும், 5 ஆண் ஊழியர்கள் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதி அறைகளுக்கு இணையதள சேவை அளிக்க வரும் போது விடுதி காப்பாளர்கள் உடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், மாணவிகளின் அறைக்குத் தனியாக ஆண் ஊழியர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்.


அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதனால், விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி என்.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.




அந்த பிரச்சனை குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டார். அப்போது விடுதியில் நடந்த பிரச்சனைகள் குறித்து மாணவிகள் எஸ்.பி. வருண்குமாரிடம் தெரிவித்தனர்.


மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. வருண்குமார் உறுதியாக மாணவிகள் மத்தியில் தெரிவித்தார். அதேசமயம் விடுதி வார்டன் எங்களிடம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.


அதேசமயம் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார். 


கல்லூரி பெண் விடுதி காப்பாளர் ராஜினாமா


இதனை தொடர்ந்து, விடுதி கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு உள்ளனர் இருந்தபொழுதும் அவர்கள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர் அவற்றையும் கல்லூரி நிர்வாகத்திலும் கூறியுள்ளோம் அந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பாலியல் அத்துமீறல்கள் ஈடுபட்ட கதிரேசன் என்கிற ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதையடுத்து தலைமை விடுதி காப்பாளர் பேபி என்பவர் மாணவர்கள் மத்தியில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். அதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


இந்நிலையில் திருச்சி என்.ஐ.டி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விடுதியின் பெண் காப்பாளர் பேபி தன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். மற்ற விடுதி காப்பாளர்கள் சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியோர் திங்களன்று ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.