அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் ஊராட்சி வண்ணம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஜெயராமன். இவரது மனைவி மலர்விழி (47) அருங்கால் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி முடிந்த பின்னர் அங்கிருந்து வாரணவாசி சமத்துவபுரத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அவர் வீட்டில் இருந்த போது வெளியில் யாரோ கூப்பிட்டது போல் சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது இருசக்கர வாகனத்துடன் நின்ற 2 பேர் வாகனத்தின் சக்கரம் சுற்றவில்லை என்று கூறி அதனை தட்டுவதற்கு ஏதேனும் இரும்புக்கம்பி தருமாறு, கேட்டுள்ளனர். இதையடுத்து மலர்விழி இரும்பு கம்பியை எடுத்து கொடுத்தார். அதனை கொண்டு வாகனத்தை சரி பார்ப்பது போல் நடித்த அவர்கள், பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.

 


 

இதையடுத்து மலர்வழி தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில், 2 பேரில் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளான். இதையடுத்து தண்ணீர் கொடுக்க வெளியே வந்த மலர்விழியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிச் சங்கிலியை, பின்னால் இருந்த பறித்த அந்த நபர், மலர்விழியை கீழே தள்ளிவிட்டார். இதையடுத்து 2 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்விழி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்றவர்கள், மர்ம நபர்களை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த நபர்களின் வாகனம் சாத்தமங்கலம் அருகே பழுதாகி நின்றது. இதைக்கண்டு அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள், பின்தொடர்ந்து பிடிக்க வந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்து பறித்த ஸ்கூட்டரில் திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் வரை சென்றனர். அங்கு ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஆற்று வழியாக தப்பிச் சென்றனர். இது குறித்து மலர்விழி கீழப்பழுவூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 



 

மேலும் கடந்த சில மாதங்களாக அரியலூர் மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த மர்ம நபர்களை பிடிப்பதற்கு காவல் துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவித்தது கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிக அளவில் திருட்டு சம்பங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிராமபுறங்களில் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில்  பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துல்ளனர், ஆகையால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.