திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக 2ஆவது முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.


நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ’’தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு. அத்தகைய தமிழ்நாட்டின் இதயப் பகுதியான திருச்சியில் தற்போது பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக 2ஆவது முனையம் அமைக்கப்பட்டுள்ளது.


புதிய முனையத்தைத் திறந்து வைத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும். சென்னை மெட்ரோ இரண்டாவது கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் நிதியை விடுவிக்க வேண்டும். 


திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்‌ தமிழ்நாட்டின்‌ இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையம்‌. இதை மேலும்‌ தமிழ்நாடு அரசு 318 கோடியே 65 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌, 294.57 ஏக்கர்‌ நில எடுப்பு செய்து இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


மேலும்‌, திருச்சி உட்பட சென்னை, கோயம்புத்தூர்‌, மதுரை, வேலூர்‌, தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம்‌ மற்றும்‌ நவீனமயப்படுத்த 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய்‌ செலவில, 2,302.44 ஏக்கர்‌ அரசு மற்றும்‌ பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப்‌ பணிகளை விரைந்து முடித்து, மக்கள்‌ பயன்பாட்டுக்குக்‌ கொண்டுவர வேண்டும.


தென்‌ தமிழ்நாட்டில்‌ இராமேஸ்வரம்‌, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவின்‌ பல்வேறு பகுதியிலிருந்தும்‌ மக்கள்‌ ஆன்மீகப்‌ பயணமாக வருகிறார்கள்‌. பல நாடுகளில்‌ இருந்து சுற்றுலாப்‌ பயணிகளும்‌ வந்து செல்கிறார்கள்‌. அவர்கள்‌ எளிதாக வந்து செலவதற்கு ஏதுவாக, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்‌ என்று நாங்கள்‌ ஏற்கனவே வைத்த கோரிக்கையை இந்தியப்‌ பிரதமர்‌ பரிசீலிக்க வேண்டுகிறேன்‌.


மலேசியா மற்றும்‌ ஐப்பான்‌ நாடுகளோடு - தமிழ்நாடு பண்பாட்டு மற்றும்‌ வர்த்தகத்‌ தொடர்புகளை கொண்டிருக்கிறது. அதைக்‌ கருத்தில்‌ கொண்டு, சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில்‌ தொடங்க வேண்டும்‌.


அதோடு, சென்னை மெட்ரோ ரயில்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்ட திட்டப்‌ பணிகளுக்குப்‌ “பங்குப்‌ பகிர்வு மாதிரி: அடிப்படையில்‌ ஒன்றிய அரசின்‌ பங்களிப்பை விரைந்து வழங்க வேண்டும்.


நெடுஞ்சாலைத்‌ துறையைப்‌ பொறுத்தவரை, 


* தமிழ்நாட்டில இப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்பட்டு வரும்‌ பணிகளை விரைவுபடுத்த வேண்டும்‌. சமீப காலமாக, இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும்‌ சுங்கக்‌ கட்டணம்‌ வரூலிக்கப்படுவதில்‌ இருந்து விலக்கு அளிக்க வேண்டும்‌.


அடுத்து, திருச்சி மாவட்டத்தின்‌ எம்எஸ்எம்இ நிறுவனங்கள்தான்‌ பெல் பொதுத்துறை நிறுவனத்துக்குத்‌ தேவையான உதிரி பாகங்களை வழங்கிக்‌ கொண்டு வந்தார்கள்‌. தற்போது பெல்  நிறுவனத்திடம்‌ இருந்து இவர்களுக்கு கேட்பாணை (Procurement Order) lacy குறைந்துவிட்டது. இதனால்‌ இந்தப்‌ பகுதியில்‌ செயல்பட்டு வரும்‌ MSME நிறுவனங்கள்‌ மிகவும்‌ பாதிப்படைந்து இருக்கிறார்கள்‌. எனவே, பெல்‌ (BHEL) நிறுவனம்‌ மீண்டும்‌ அதிகப்படியான கேட்பாணைகளை இவர்களுக்கு வழங்கவேண்டும். 


கடந்த மாதம்‌ சென்னை மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌, கடுமையான மழைப்பொழிவை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம்‌ காரணமாக, அந்த மாவட்டங்களில்‌ பொது உட்கட்டமைப்புகள்‌ பெருத்த சேதமடைந்திருக்கிறது. மக்களின்‌ வாழ்வாதாரமும்‌ மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றை “கடுமையான இயற்கைப்‌ பேரிடர்கள்‌” என்று அறிவித்து, தேசிய பேரிடர்‌ நிவாரண நிதியில்‌ இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும். 


தமிழக அரசின் கோரிக்கைகளில் அரசியல் எதுவும் இல்லை. திரும்பத் திரும்பக் கேட்பதாக நினைக்க வேண்டாம்.. இது அரசியலுக்காக அல்ல’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 


இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, பாஜகவினர் மோடி, மோடி என்று முழக்கமிட்டனர்.