”தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதற்கு மாநில எல்லைப்புற மாவட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். அண்டை மாநிலக் காவல்துறையின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் எல்லைப்புற சோதனைச் சாவடிகளை வலுப்படுத்திட வேண்டும். தேனி, திண்டுக்கல் போன்ற மலையடிவாரப் பகுதிகள், மறைவான இடங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், இதர பயிர்களுக்கு இடையில் கஞ்சா பயிரிடுவதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால், மலையை ஒட்டி அமைந்திருக்கும் வேளாண் நிலங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைகள் செய்ய வேண்டும். சாதாரணப் பயணிகள் மூலமாகவும் கூரியர் வழியாகவும் போதைப் பொருள் வருவதாகச் சொல்லப்படுகிறது. பயணிகள் பேருந்துகள் கண்காணிக்கப்பட வேண்டும். கூரியர் நிறுவனங்களுக்கு இது குறித்த எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும்.போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கு, போதைப் பொருள் அறவே கூடாது, அந்த இலக்கை நோக்கி அனைவரும் நடைபோடுவோம். போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றார்.




இதனை தொடர்ந்து திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 11,950 மாணவ-மாணவிகள் பங்கேற்று ஒரே இடத்தில் கூடிநின்று போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் பேசுகையில், போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். போதைப்பொருள் மட்டுமின்றி லாட்டரி விற்பனையை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானத்துக்கு முதல்கட்ட பணி முடிந்து, 2-வது கட்ட பணிக்கு டெண்டர் விட்டுள்ளார்கள். சாலைகள் போட்டபிறகு மீண்டும் தோண்டுவதாக கூறப்படுவது தவறு. மழை பெய்து சாலைகளில் ஈரம் இருக்கும்போது தார் ஊற்றினால் ஒட்டாது. ஈரம் காய்ந்தபிறகு தான் தார் ஒட்டும். அதனால் தான் மீண்டும் தோண்டிவிட்டு சாலை போட வேண்டி உள்ளது என்றார். 




தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு அரங்கம் உருவாக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். நல்ல தடகள வீரர்களை உருவாக்க ஆலோசனைகளை வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக அந்த கட்டிடத்தை எந்தமாதிரி பயன்படுத்தலாம் என கலெக்டர், அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இது குறித்து முதலமைச்சரிடமும் தெரிவிக்கப்படும் என்றார். முன்னதாக மாணவ-மாணவிகள், காவலர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், சென்னையில் நடந்த போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதி ஏற்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய காட்சி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த திரையில் ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண