பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தரப்பில் தபால் வாக்குகள் செலுத்துவது குறித்து முறையான அறிவிப்புகள் மற்றும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நேரில் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க முடியாதவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தபால் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களில் செலுத்தினர். மேலும், மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்ட, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய பாராளுமன்ற தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு. இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையமாக திருச்சி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.




38 மாவட்டங்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டது.


இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிட திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுவான சிறப்பு மையம் அமைத்திட உரிய ஏற்பாடுகள் திருச்சி கலையரங்கத்தில் செய்யப்பட்டது. இந்த மையத்தில் நேற்று  அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிடும் பணியினை  திருச்சி பாராளுமன்ற தொகுதி மாவட்ட ஆட்சியர் திருச்சி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் அஞ்சல் வாக்குகள் தொடர்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களால் அந்தந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள், தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரின் தொடர்புடைய அலுவலர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. பின்னர் 38 மாவட்ட அலுவலர்களும் இந்த மையத்தில் பெற்றுக்கொண்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய காவல்துறை பாதுகாப்புடன் தங்களது மாவட்டத்திற்கு எடுத்து சென்றனர். இந்த மையத்திற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டது. இந்நிகழ்வில், அனைத்து மாவட்டத்திலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் தொடர்பு அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.