திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி , செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார்.


மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ்,  தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் மற்றும்  மாவட்ட தலைவர்கள், நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கட்டத்தில் கலந்துக்கொண்டனர். 


திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் பேச்சு.. 


திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைத்து வருகிறார். குறிப்பாக மண்டலம், வார்டு வாரியாக பல்வேறு கூட்டங்கள் நடத்தி கட்சியை வலுப்படுத்தியுள்ளனர்.




ஆகையால் இனிவரும் காலங்களில் நடைபெறும் எந்த தேர்தலாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அதிக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக மாநகராட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில், 35 வார்டுகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.


திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறும் அளவிற்கு நமது நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.




தமிழ்நாடு இளைஞர் அணி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் பேச்சு.. 


தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களிடையே பொய், பித்தலாட்டம், பேசி வருகிறார். குறிப்பாக பாஜகவில் ஒருவர் உறுப்பினராக சேர வேண்டும் என்றால், அவர் மீது குண்டாஸ் போன்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உண்மையாக உழைத்தால் போதும் என்றார். 




திருச்சி காங்கிரஸ் கட்சியின் சிலருக்கு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது


திருச்சியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கோரிக்கையை முன் வைத்தார். இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் எழுச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோன்று விரைவில் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.