பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடியில் ஒரு நீர்த்தேக்கம் உள்ளன. இந்த நிலையில் மாவட்டத்தில் மற்றொரு நீர்த்தேக்கமாக ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே தமிழக அரசின் பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை சார்பில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பணிகள் அந்த ஆண்டிலேயே மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும் என்று கூறிய பொதுப்பணித்துறை தற்போது 6 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது தான் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இறுதி கட்ட பணியான நீர்த்தேக்கத்தின் வலது, இடது புறங்களில் பாசன வாய்க்கால்கள் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீர்த்தேக்க பணிகள் நிறைவடைந்தால் கொட்டரை, ஆதனூர், கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், தொண்டபாடி, நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.




இந்த நீர்த்தேக்கத்துக்காக கொட்டரை, ஆதனூர் கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் மறுகரையில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் சரியாக விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்காலிக நடைபாதை வசதி அமைத்து தரப்படும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு பெயரளவுக்கு மட்டுமே உள்ளது.




மேலும்  இப்பகுதியில் பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியும் பயன்பாடில்லாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  கொட்டரையை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "6 ஆண்டுகளை கடந்தும் கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையாததால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாசன வாய்க்கால்கள் அமைக்கப்படாதால் நீர்த்தேக்கத்தின் நிரம்பியுள்ள தண்ணீர் கசிந்து விவசாய நிலங்களுக்கு தேங்கி வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் அந்த விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும், பாசன வாய்கால்களை அமைக்கும் பணிகளை தொடர வேண்டும். நீர்த்தேக்கத்தின் மறுகரையில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு சென்று வர தார்சாலை அமைத்து தர வேண்டும். கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.