தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில், நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் 2 ஆயிரம் பேருக்கு வங்கி ஏ.டி.எம்.கார்டுகளை வழங்கினர். மேலும், மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த சிறப்பாக பணிபுரிந்த 25 அரசு அலுவலர்களுக்கு அமைச்சர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து அரசுத்துறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயிர்நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார், எம்.எல்.ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், அப்துல்சமது, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் கருத்து :


குடும்ப தலைவி கவிதா :  எனது கணவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நான் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி செலவுக்கு அடுத்தவர்களை நம்பி இருக்க தேவையில்லை. பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சருக்கு மனமார்ந்த பாரட்டுக்கள். அவர் நீடுழி வாழ வேண்டும். என்னை போன்ற ஏழை-எளிய பெண்களுக்கு இந்த உதவி தேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




இல்லத்தரசி முத்தமாள் : மகளிர் உரிமைத்தொகை நேற்று முந்தினமே எங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை எங்களது குடும்ப செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களை போன்ற குடும்ப தலைவிகளுக்கு கையிருப்பு தொகையாக இருக்கும். மேலும் அவசர காலங்களில் இந்த தொகை பேருதவியாக இருக்கும். இந்த திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.


குடும்ப தலைவி சரிதா :  மகளிர் உரிமைத்தொகை எங்களுக்கு கிடைத்துள்ளது மிகவும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அனைத்து தரப்பு மக்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர். எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லை என்றால் யாரிடம் பணம் கேட்பது என்று கூட தெரியாத நிலையை தவிர்க்க, என்னை போன்றவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக இந்த உரிமைத்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பள்ளி செலவுக்கும், அவரச தேவையான மருத்துவம் செலவுக்கும் இனிமேல் யாரையும் எதிர்பார்த்து இருக்க வேண்டாம் என்றனர்.