தஞ்சாவூர்: லஞ்ச வழக்கில் முன்னாள் இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக (கிளார்க்) பணியாற்றியவர் டி. ரெங்கராஜன். லஞ்சம் பெற்ற வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருச்சி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் அரங்கநாயகி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் நா.மாரியப்பன் . இவர் கடந்த,13.11.2008 அன்று பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுபெற்றார். இதுதொடர்பாக, ஆறாவது ஊதியக்குழு அமலுக்கு வருவதற்கு முன் மாநில அரசு அறிவித்த இடைக்கால நிவாரணமாக மூன்று மாத ஊதியம்,7.5 மாத நிலுவை ஊதியம் மற்றும் எம்ஏ., படிப்பிற்கான ஊக்கத்தொகையை பெற விண்ணப்பித்திருந்தார்.
இந்த தொகைகளை வழங்குவதற்காக இவர் பணிபுரிந்த பள்ளியின் கிளார்க் ரெங்கராஜன் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மாரியப்பன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கடந்த 30.09.2009 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் படி கடந்த 01.10.2009 அன்று லஞ்சப் பணத்தை பெறும் போதே ரெங்கராஜன் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி புவியரசு இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் லஞ்சம் கேட்டதற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல், ₹5,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை)
அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல்₹5,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை)இவ்விரு தண்டனைகளும் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தண்டனை பெற்று தந்தார்.