அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 134 பேர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் 44 பேர், நிரந்தர தூய்மை பணியாளர்கள் 20 பேர் என 198 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்  காலை துப்புரவு பணிக்கு செல்லாமல் அனைத்து துப்புரவு பணியாளர்களும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  தங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிய 40 பணியாளர்களுக்கு, இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் கேட்டபோது காலதாமதம் செய்யப்பட்டது  என்றனர். மேலும், தற்போது மற்ற நகராட்சிகளில் பணம் கொடுக்காததால், அவர்களுக்கும் பணம் வழங்கப்படாது என்று நகராட்சி ஆணையர் கூறியதாலும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

 



 

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் அங்கு வந்து ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி தம்பிசிவம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பணிக்கு செல்லுமாறும் ஆணையரிடம் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதையடுத்து போராட்டக்காரர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நகராட்சியில் சிறிது நேரம் நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் காவல்துறை உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

இதை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேர்தல் பணிக்கான சம்பளத்தை இன்று மாலைக்குள் தருவதாகவும், பிப்ரவரி மாதத்திற்கான ஊதியத்தை 3 நாட்களுக்குள் அவரவர்களது வங்கி கணக்கில் வரவு வைப்பதாகவும், டெங்கு பணியாளர்களுக்கு இது நாள்வரை 242 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 50 ரூபாய் சேர்த்து 292 ரூபாயாக தருவதாகவும் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் நகரமன்ற தலைவர் ஆகியோர் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 



 

இதனை தொடர்ந்து நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுபணியாளர்கள் நேரம் பாராமல் தங்களது பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் மாதம் சம்பளம் மிகவும் குறைவாக தான் தரபடுகிறது இதனால் மாத சம்பளத்தை உயர்த்தி வழங்கிட பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்க்கொள்ளவில்லை என்றனர். குறிப்பாக  கடந்த மாதம் சம்பளம் வழங்கபடாமல் இருபதால் நாங்கள் அனைவரும் மிகவும் சிரமபட்டு வருகிறோம் ஆகையால் தங்களது நியாமன கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினோம் என்றனர். அதிகாரிகள் கொடுத்த வாக்குறிதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.