திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதிப்குமார் இன்று காலை 9.05  மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ணபலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார்.


மேலும்  வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை,  காவல்துறை , மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணித்துறை,  அரசு போக்குவரத்துக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாக பணியாற்றிய 157 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் வருவாய்த்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, வாழ்ந்து காட்டுவோம், திட்டம் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் , ஆகிய துறைகளின் பணியாளர்களுக்கு ரூபாய் 1.62 கோடி மதிப்பீட்டில் ஆனா நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.




திருச்சி மாவட்டத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று உயர் அலுவலர்களால் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும்  இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை  தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, காவல்துறை துணை ஆணையர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி,  மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் சிறப்பாக நடனம் ஆடிய குழுவிற்கு பரிசுகள் வழங்கபட்டது. மேலும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.