திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் திருச்சி - தஞ்சாவூர், திருச்சி - புதுக்கோட்டை, திருச்சி-மதுரை, திருச்சி - திண்டுக்கல், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் துவாக்குடியிலிருந்து மாத்தூர், பஞ்சப்பூர், சோழன் நகர் வழியாக ஜீயபுரம் வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி துவாக்குடி - பஞ்சப்பூர், பஞ்சப்பூர் - ஜீயபுரம் என இருகட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

 

நிலம் கையகப்படுத்துவதில் இருந்த இடர்பாடுகள் காரணமாக பஞ்சப்பூர் - ஜீயபுரம் இடையிலான 18.43 கி.மீ சாலைப் பணி கிடப்பில் உள்ளது. இதே வேளையில் துவாக்குடி - பஞ்சப்பூர் இடையிலான 25.91 கி.மீ சாலைப்பணிகள் கடந்தாண்டே 95 சதவீதம் நிறை வடைந்து விட்டது. ஆனால் காரைக்குடி - திருச்சி ரெயில் வழித்தடத்தில் குமாரமங்கலம் ரெயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க தெற்கு ரெயில்வே அனுமதி தராததால் இந்த சாலைப்பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

 

இதை தொடர்ந்து கால தாமதத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அபராதத்தொகையைச் செலுத்திய ஒப்பந்த நிறுவனம் நிகழாண்டில் மட்டும் 3 முறைக்கு மேல் மேம்பாலம் அமைக்க அனுமதி கேட்டு ரெயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் ரெயில் போக்குவரத்து மின்பாதை ஆகியவற்றுக்கு போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை எனகூறி மேம்பாலம் கட்ட அனுமதி தர ரெயில்வே நிர்வாகம் மறுத்து விட்டது.

 



 

இதனை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி குமாரமங்கலம் பகுதியில் பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கர்டர்களை நிலைநிறுத்தும் தூண்கள் - மின்பாதை இடையேயான இடைவெளி ஆகியவை சரி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வுக்குப்பிறகு மேம்பாலம் கட்ட கடந்த மாத இறுதியில் அனுமதி கிடைத்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக கான்கிரீட் கர்டர்களை ரெயில் பாதையில் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

 

இப்பணிகள் முடிவடைந்து அக்டோபர் மாதத்தில் இந்தச்சாலை பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியது.. துவாக்குடி - பஞ்சப்பூர் சுற்றுச்சாலையில் காரைக்குடி - திருச்சி ரெயில் வழித்தடத்தில் குமாரமங்கலம் ரெயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக ராட்சத கிரேன்கள் மூலம் கான்கிரீட் கர்டர்களை தூண்களி நிலை நிறுத்தும் பணி நடை பெற்று வருகிறது.

 

அதன்பிறகு மேம்பாலத்தின் குறுக்கே இரும்பு தூண்கள் அமைத்தல், சோதனை அடிப்படையில் போக்குவரத்து இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ரெயில்வே நிர்வாகத்தின் அனுமதி கிடைத்த பிறகு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண