தஞ்சாவூர்: திருச்சியில் உணவுப்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

திருச்சி விமான நிலையம் அருகே உணவுப் பொருள் ஏற்றுமதியை அதிகரிக்க உணவுப் பொருளை பரிசோதனை செய்ய புதிய ஆய்வகம் ஒன்று அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது .

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி கழகம், திருச்சியில் ரூ.7.6 கோடி செலவில் உணவு தர பரிசோதனை ஆய்வகத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆய்வகம் ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான தர சான்றிதழ்களைப் பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  இதன் மூலம், அவர்கள் தங்கள் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உணவு, காய்கறி மற்றும் பழங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்த ஆய்வகம் மூலம், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பா போன்ற புதிய சந்தைகளில் தங்கள் பொருட்களை விற்க முடியும். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த ஆய்வகத்திற்கான நிர்வாகப் பணிகள் இந்த நிதியாண்டில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். TNAPEX என்பது மாநில அரசு நிறுவனம். இது உணவு மற்றும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. இந்த ஆய்வகத்தில் பெரும்பாலான விவசாய பொருட்கள், உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுகளை பரிசோதிக்க முடியும்.

இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப, உணவில் உள்ள சத்துக்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவு போன்றவற்றை இந்த ஆய்வகம் பரிசோதிக்கும். இந்த ஆய்வகத்துடன், ஒருங்கிணைந்த பேக்கிங் மற்றும் பதப்படுத்தும் பிரிவுகளும் அமைக்கப்படும். இந்த திட்டத்திற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் நிதி உதவி செய்கின்றன. இன்றைய காலக்கட்டத்தில் திருச்சி விமான நிலையம் மூலம் மாதம் சுமார் 600 டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகும். தின்பண்டங்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள், துணிகள் மற்றும் இன்ஜினியரிங் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால், ஐரோப்பிய சந்தைகளில் இந்தியர்கள் அதிகம் இருப்பதால், அந்த சந்தைகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியவில்லை. ஏனெனில், அங்கு தர சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தர பரிசோதனை ஆய்வகங்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவை பரிசோதிக்கும் ஆய்வகங்கள் (MRL சான்றிதழ்) சென்னை மற்றும் ஓசூரில் மட்டுமே உள்ளன. பெங்களூரில் பரிசோதனை கட்டணம் குறைவாக இருப்பதால், ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை அங்கு பரிசோதித்து ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் கர்நாடகாவிற்கு வருவாய் கிடைக்கிறது.

இதுகுறித்து ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தரப்பில் கூறுகையில், "பெங்களூருக்கு பொருட்களை அனுப்பி பரிசோதனை செய்தால், சரக்கு கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வருவாய் திருச்சி விமான நிலையத்திற்கும், மாநில அரசுக்கும் கிடைக்காது. திருச்சியில் ஆய்வகம் அமைக்கப்பட்டால், ஏற்றுமதி செய்வது எளிதாகும். மேலும், சரக்கு விமான சேவைகளும் கிடைக்கும் என்று தெரிவித்தனர். 

திருச்சி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க திட்டம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் பெரிய விமானங்கள் மூலம் அதிக சரக்குகளை அனுப்ப முடியும். இது ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தைகள் கிடைக்கும். இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் நல்ல வருவாயை பெற இயலும். அதற்கு இந்த ஆய்வகம் உறுதுணையாக இருக்கும்.

ஏற்றுமதியாளர்கள் தரப்பில் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளின் கடுமையான இறக்குமதி விதிமுறைகளால் எம்ஆர்எல்  சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது, ஒருங்கிணைந்த பேக்கிங் வசதியுடன் கூடிய ஆய்வகம் அமைக்கப்பட இருப்பது காய்கறி மற்றும் பழ ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த ஆய்வகம் மூலம், நிலக்கடலை, முந்திரி, எண்ணெய் வித்துக்கள், அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, கோழி மற்றும் கடல் உணவுகளையும் ஏற்றுமதி செய்ய முடியும். தற்போது, மாம்பழம், மாதுளை மற்றும் நாட்டு காய்கறிகள் திருச்சியிலிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.