பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு - திருச்சி அருகே சோகம்

திருச்சி மாவட்டத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டியை அடுத்த குண்டுமணிப்பட்டியைச் சேர்ந்தவர் வேதாச்சலம்(வயது 35). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா(32). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இந்துஜா(8), சஹானா(6) என 2 மகள்கள் உண்டு. இதில் இந்துஜா குண்டுமணிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சஹானா 1-ம் வகுப்பும் படித்து வந்தாள். குண்டுமணிப்பட்டியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில் நேற்று மாலை சஹானா விளையாட செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றாள். மழைநீர் தேங்கிய பள்ளத்தின் அருகே அவள் விளையாடியபோது, திடீரென அவள் பள்ளத்தில் தவறி விழுந்து, நீரில் மூழ்கியதாக தெரிகிறது. 

Continues below advertisement




இதற்கிடையே சஹானா வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவளது பெற்றோர் சஹானாவை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது சஹானா பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கியதை அறிந்த அக்கம் பக்கத்தினர், சஹானாவை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சஹானாவை பரிசோதித்த டாக்டர், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனால் அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஹானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுக்குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது.. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலைகள் புதிதாக அமைக்கும் பணி ,பாதாள சாக்கடை பணி, குடிநீர் வடிகால் அமைக்கும் பணி போன்ற பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.  ஆனால் இந்தப் பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். பல்வேறு இடங்களில் இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல விபத்துக்கள் அவ்வப்போது நடக்கிறது.  அதிலும் பள்ளிக்கூட வளாகங்கள், சமூக நலக்கூடங்கள், சத்துணவு  கூடங்களில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.  ஆனால் அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் ஆங்காங்கே பள்ளங்களை மட்டும் தோண்டி விட்டு சென்று விடுகிறார்கள். 

இந்த நிலையில் மழை காலம் தொடங்கியதால் மழை நீர் வெள்ளம் போல் பள்ளத்தில் நிரம்பி வழிகிறது. இதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அந்தப் பகுதியை கடக்க வேண்டும் என்றால் மிகுந்த அச்சமான சூழ்நிலையில் தான் கடக்க வேண்டும். பள்ளங்கள்  இருக்கிறதே தெரியாத அளவிற்கு மழை நீர் தேங்கி இருப்பதால் குழந்தை இறந்து விட்டது. ஆகையால் பணிகள் முடிக்காமல் விட்டாலும் பரவாயில்லை, பள்ளங்கள் இருக்கும் இடத்தில் ஒரு அறிவிப்பு பலகையாவது ,அதை சுற்றி வேலியாவது அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola