திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 46-வது இந்திய சமூக அறிவியல் 5 நாள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெறுகிறது. மாநாட்டை சென்னையில் இருந்து காணொளி மூலமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலை, சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை நாட்டில் இருக்கும் சுய சார்பு நிலைகள், இனிமேல் சுயசார்பு நிலையை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்கள் ஆகியவற்றினை கருப்பொருளாக வைத்து வாழ்க்கை தரத்தை மதிப்பீடு செய்தல், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மற்றும் பாகுபாடு, வன்முறை, அச்சம் இல்லாத மாண்புடனான வாழ்க்கை, இந்திய மக்கள் அனைவரும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உண்டான விவாதங்களை மைய கருப்பொருளாக கொண்டு இம்மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். 75 வது ஆண்டு இந்திய சுயராஜ்யத்தின் மீதான அறிவியல் பூர்வமான எதிர்கால திட்டங்களை மையமாக வைத்து விவாதங்களும் நடக்கின்றன.


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் மா. செல்வம், பதிவாளர் கணேசன், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் கம்பத்தூர் முரளிதர், கேரள மாநிலம் முன்னாள் தலைமைச் செயலாளர் விஜய்ஆனந்த், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான தங்க ஜெயராமன், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை வழங்கி பேசுகின்றனர். இக்கருத்தரங்கள் வழங்கப்படும் ஒவ்வொரு கருத்துக்களையும் தொகுத்து பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களை குறித்து அறிக்கையை அந்தந்த துறைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த மாநாட்டினை அலகாபாத் இந்திய சமூக அறிவியல் அகாடமி இணைந்து நடத்துகிறது.




இதனை தொடர்ந்து மாநாட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வரவேற்றார். இந்திய சமூக அறிவியல் கழகத்தின் தலைவர் பழனிதுரை தலைமை தாங்கினார். மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசுகையில், “காலனி ஆதிக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் கலாசார பண்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். பிரிட்டீஷ் காலனியம் இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார பண்புகளை அவர்களது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து, கல்விமுறை, பொருளாதாரம் மற்றும் இதர தளங்களில் தலையீடு செய்தது. அதனை தற்போது மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்கான ஆதாரங்களை ஆவணக் காப்பகங்களில் காணலாம். பூரண சுயராஜ்ஜியம் என்பதன் பொருளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை உணர வேண்டும் என்றால் காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்துக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் அவரவர் துறையில் வினை ஊக்கிகளாக இணைந்து செயல்பட வேண்டும்” என்றார். 


மேலும்,மாநாட்டில் இந்திய சமூக அறிவியல் கழகத்தின் பொதுச்செயலாளர் சாம்பசிவராவ், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் மற்றும் சமூக அறிவியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழக யு.ஜி.சி. மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் செந்தில்நாதன் நன்றி கூறினார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 450 சமூக அறிவியல் நிபுணர்கள் சிறப்பு தலைப்புகளில் சொற்பொழிவாற்றவும், ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்கவும் பதிவு செய்துள்ளனர். இந்த மாநாடு வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.