திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு,  பூங்கொத்து வழங்கியும், சாக்லேட் வழங்கியும், வரவேற்று ,அவர்களுடன் கலந்துரையாடி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதன்படி  விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 34 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர இருக்கின்றனர். 




மேலும் ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழை பள்ளியில் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு பள்ளி நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அவர்கள் புத்துணர்வுடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஆசிரியர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்பட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை பள்ளிகள் திறந்ததும் 10 முதல் 15 நாட்களுக்கு நடைமுறைப்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.




கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாத காரணத்தினால், பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பின்பற்றவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை, பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் வழிக்கல்வியையும் தொடரலாம் என்றெல்லாம் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. அதனை பின்பற்றியே இன்று 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.