சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள 4 நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  குறிப்பாக திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று நள்ளிரவு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கடைகளில் தொடர்ந்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திருச்சி சின்ன கடை வீதியில் உள்ள ஜாபார்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி,சூர்யா விக்னேஷ் உள்ளிட்ட  மூன்று கடைகள், பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும், அமலாக்குதுறை அதிகாரிகள் கடையில் உள்ளே நகைகள் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வரும் நிலையில் வெளியில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர், குறிப்பிட்ட இந்த 4 கடைகளில் நடத்தப்படும் சோதனைக்கும் சென்னையில் நகை கடைகளில் நடத்தப்பட்ட சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்களில் மணல் குவாரிகளில் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருச்சியில் சிறிய நகை கடைகளின் மூலம் வேறு தொழிலில் முதலீடு செய்து வருகிறார்களா? அல்லது மணல் குவாரியுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? அதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.




மேலும் திருச்சி சின்ன மற்றும் பெரிய கடை வீதிகளில் அதிக அளவு நகைகள் விற்பனையாகி வருகிறது. தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையால் அப்பகுதியில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக இந்த சோதனையில் 6 கார்களில் , 20 அதிகாரிகள், 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.