திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் இளநிலை பாடங்களில் தலா ஒரு பாடத்திற்கு 75 ரூபாயில்  இருந்து 125 ரூபாயாகவும் ஆகவும், முதுநிலை பாடங்களில் தலா ஒரு பாடத்திற்கு 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் ஆகவும் உயர்த்தப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தொடர்ச்சியாக பல்வேறு கட்சியினர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம்  நிருபர்களிடம் கூறியதாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றி அமைக்கப்பட்ட தேர்வு கட்டண விகிதங்கள் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில் ஒப்புதல் பெற்று இந்த மாத தேர்வில் இருந்து அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தோம். இந்நிலையில் தங்களது பொருளாதார நிலையை சுட்டிக்காட்டி, ஏற்றப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 



 

அதன்படி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட கூடுதல் தேர்வு கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டண விவரங்கள் இந்த மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கு தொடரும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ள தேர்வு கட்டணத்தை ஆய்வு செய்த பின்னர்தான் நமது பல்கலைக்கழகத்தின் வரவு, செலவு கணக்குகளை பார்த்தபிறகு தேர்வு அறிவிப்பு குழு மூலம் தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து தேர்வு அறிவிப்பு குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். பல்கலைக்கழக பொருளாதார நிலையை பொறுத்தவரை முன்பு தமிழக அரசிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வரும். பல்கலைக்கழக தேர்வு கட்டணம், நுழைவு கட்டணம் மூலம் வருவாய் வரும். பல்வேறு காரணங்களால் இந்த தொகை தற்போது வருவதில்லை என்றார்.

 



 

மேலும் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. மார்ச் மாத ஊதியம் உயர்த்தப்பட்ட ஊதியமாக வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. தனியார் மற்றும் உதவிபெறும் கல்லூரிகள் பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் இதுவரை வரவில்லை. இந்த முறையில் உள்ள சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.