தமிழகத்தை பொறுத்தவரை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பண்டையக்கால சிறப்பு மிக்க கல்வெட்டுகள் தொடர்ந்து கண்டெடுக்கபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில் கி.பி.9ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி.11.ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. குளத்தூர் தாலுகா கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில், ஆசிரியர் கண்ணதாசன் கொடுத்த தகவலின் அடிப்படையில், மதுரை பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனைவர். து.முனீஸ்வரன், முனைவர் சி.செல்லபாண்டியன் அவர்களின் தலைமையில், கீரனூரை சேர்ந்த, பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களுமான முருக பிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கொண்ட குழு களஆய்வு மேற்கொண்டதில், ஒரே பாறையின் மேற்பரப்பில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டுகளை மை படியெடுத்து ஆய்வுசெய்தபோது  கி.பி.9 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை  என்று அறியப்பட்டது. 




இக்கல்வெட்டை  படியெடுத்து, ஆய்வு செய்த தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழரின் தொன்மையை பறை சாற்றுகின்ற, பொற்பனை கோட்டை, முதல் கட்ட  அகழ்வாய்வில், பல வரலாற்று தடயங்கள் கண்டறிந்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில், தனிப்பாறையில் 2 அடி நீளம், 2 அடி அகலம், 5 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டில் "ஸ்ரீ இடைத்தி சாத்தங் குருன்தி சுனை இயிதுஅழியாதி" என பொறிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நீர் ஆதாரத்திற்காக, சாத்தங் குருன்தி என்பவர், பாறையின் மேல் சுனையை குடைந்து, தண்ணீர் பயன்பாட்டிற்காக அளித்தமையை குறிக்கிறது. கல்வெட்டின், ஐந்தாம் வரி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. அகநானூற்றில் களிற்றியானை நிரையில் ,8 இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகளில், சுனைகள், வளத்தை உணர்த்துவதாகவும், வறுமையை உணர்த்துவதாகவும், பெரும்பாலான இடங்களில் கூறப்பட்டுள்ளது. 



இதன் அருகே காணப்படும் மற்றொரு கல்வெட்டில் 6 அடி நீளம், 4 அடி அகலம் என 8 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. பெரும்பாலான எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளதால், கல்வெட்டின் பொருளை அறிந்து கொள்ள முடியவில்லை. இப்பாறை கல்வெட்டுகள், கிடைமட்டமாக பொறிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டத்தால் எழுத்துக்கள் முற்றிலுமாக அழிந்து போகும் நிலையில் உள்ளது. மேலும், இப்பாறை கல்வெட்டுகளின், வடபுறம் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஈமக் காடுகளும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்குப்பின் பாறைக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுனையை தானமாக அளித்த கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில், வேறெங்கும் கண்டெடுத்ததாக இதுவரை அறியப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கல்வெட்டின் அமைவிடம் தெரிந்து, படியெடுத்திருந்தால், பூலாங்குறிச்சி கல்வெட்டினைப் போல் அரிய செய்தி கிடைத்திருக்க வாய்ப்புண்டு.  இப்பாறைக் கல்வெட்டுகளுக்கு,மேற்கூரை அமைத்து சிதிலமடையாமல் தடுத்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே ,தொல்லியல் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது  என்றார்கள் .