புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவால்குடி ஊராட்சிக்குட்பட்ட மயிலாடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). இவருடைய மனைவி அஞ்சலை (50). இவர்களுடைய மகள் பவித்ரா (21). இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் பி.ஏ. இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் கருப்பையா. இவருடைய மகன் துரைக்கண்ணு (36), கொத்தனார். பன்னீர்செல்வமும் ,கருப்பையாவும் உறவினர்களாவர். இந்தநிலையில் துரைக்கண்ணுவும், பவித்ராவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பவித்ராவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதனால் பவித்ரா துரைக்கண்ணுவுடன் பழகுவதையும், பேசுவதையும் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநேரத்தில் பவித்ரா அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் பவித்ரா மட்டும் தனியாக இருந்ததை அறிந்த துரைக்கண்ணு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த துரைக்கண்ணு தான் வைத்திருந்த அரிவாளால் பவித்ராவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பவித்ரா பரிதாபமாக இறந்தார். பின்னர் துரைக்கண்ணு அங்கிருந்து தப்பி ஓடினார். வழக்கம்போல் வேலை முடிந்து வீடு திரும்பிய அஞ்சலை தனது மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இவரது அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். 

 



 

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் துரைக்கண்ணு வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக கிடந்தார். விசாரணையில் அவர் பவித்ராவை கொலை செய்து விட்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து பவித்ராவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், துரைக்கண்ணுவின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உஷாராணி மற்றும் அதிகாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண