நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை விரைவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார். இதற்காக தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலமாக பிரித்து, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், தேவையையும் கேட்க தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் இன்று  நடைபெறுகிறது. இதற்காக 15 ஏக்கரில் சுமார் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.  மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி  வரை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய, திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 தி.மு.க. மாவட்டத்துக்கு உட்பட்ட டெல்டா மாவட்டங்களில் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.



 

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு மதிய உணவு அருந்திவிட்டு, ஓய்வு எடுக்கிறார். பின்னர் அவர், மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு அங்கு தங்குகிறார். பின்னர் நாளை  காலை 10 மணியளவில் திருச்சி கேர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி-கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்லும் முதலமைச்சர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகள் முடிந்து கார் மூலம் மீண்டும் திருச்சிக்கு வந்து இங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருவதால்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த  2 நாட்களுக்கு திருச்சி மாவட்டத்தில் ட்ரோன் கேமரா பறக்க தடைவித்து  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். மேலும் தடையை மீறி செயல்பட்டால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண