மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று  தொடங்கியது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய தொழிற்சங்கங்கள் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் வாலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


அந்தவகையில் திருச்சியில் இன்று  காலை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியில் உள்ளனர். மேலும் தனியார் பேருந்து மட்டும் இயங்கி வருவதால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனைக்காரணம் காட்டி  வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதாக பேருந்து பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் மக்கள், ஆட்டோ மற்றும் வாடகை கார் மூலம் செல்லக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நான்கு அரசு போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் புறநகரில் 18 இடங்களிலும், மாநகரில் ஒரு இடங்களும் என மொத்தம் 19 இடங்களில் இன்று  மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தற்போது நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருவதால், முக்கியமான இடங்களில், அதிக அளவில் காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.


மேலும் ஆங்காங்கே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் பல வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.  திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து, இன்று காலை இயக்கப்படும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. மணப்பாறை, துறையூர், லால்குடி,மண்ணச்சநல்லூர், சமயபுரம் போன்றபுறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறைவாக உள்ளதால், தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.




 


இதே போல் மத்திய பேருந்து நிலையத்திலும் 30% அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட, மலை தொழிற்சங்கத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக ரயில்வே நிலையத்தை, முற்றுகையிட செல்ல உள்ளதால், 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளையும் போராட்டம் தொடரும் என்பதால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றனர்.


இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க திருச்சி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.