புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி ஒன்றியம் கருப்பர் கோவில்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் பொன்னடைக்கண் (28). இவர் பொள்ளாச்சியில் உள்ள தேங்காய் உரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கருப்புக்குடிப்பட்டி சின்னபிள்ளை மகள் பஞ்சவர்ணம் (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

 

இவர்களுக்கு 2 வயதில் ஜெகதீசன் என்ற ஆண்குழந்தையும், தக்‌ஷினியா என்ற 8 மாத பெண் குழந்தையும் இருந்தனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வீடு கட்டுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. மேலும் பொன்னடைக்கண்ணுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது.  மேலும் கணவன்-மனைவி இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தேங்காய் உரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். சமீபத்தில் திருவிழாவை முன்னிட்டு பொன்னடைக்கண் குடும்பத்தோடு தனது ஊரான கருப்பர்கோவில் பட்டிக்கு வந்தார். சம்பவத்தன்று கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாய் சின்னபிள்ளை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றனர். அங்கு சின்னபிள்ளை, கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்ளாதீர்கள் என்று சமரசம் பேசியுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் இனி தகராறு எதுவும் செய்யமாட்டோம் என்று கூறினர்.

 



 

இதனைத் தொடர்ந்து கணவன் - மனைவி இருவரும் குடும்பத்துடன் கருப்பர் கோவில்பட்டிக்கு சென்றனர். இந்த நிலையில் பொன்னடைக்கண் வீட்டில் இருந்து வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டிலிருந்த பஞ்சவர்ணம் திடீரென குடும்ப பிரச்சினையை நினைத்து கொண்டு மன விரக்தியில் இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் தனது 2 குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் கொலை செய்த தகவலை தனது வீட்டின் பக்கத்தில் உள்ள சின்னு என்பவரின் செல்போனை வாங்கி தனது தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த சின்னபிள்ளை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். சின்னபிள்ளையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதாக கூறி வெளிேய சென்ற பஞ்சவர்ணத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த பொன்னடைக்கண் தனது 2 குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது. தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் இறந்து கிடந்த குழந்தைகளை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
  

 



 

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி துணை காவல்துறை சூப்பிரண்டு அப்துல் ரகுமான், இன்ஸ்பெக்டர் தனபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், குடும்பத்தகராறு காரணமாக தான் பெற்ற 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றதாக பஞ்சவர்ணம் ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து காவல்துறையினர்  2 குழந்தைகளையும் பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த பின்னர் 2 குழந்தைகள் உடல்களையும் பிேரத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து பொன்னமராவதி காவல்துறையினர் பஞ்சவர்ணத்தை கைது செய்தனர். மேலும் பொன்னடைக்கணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 2  குழந்தைகளை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.