திருச்சி மாவட்டம், குண்டூர் பகுதியில் எல்லோருக்கும் எல்லாம், டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் , அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 


இதனை தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது.. 


”திமுக மறைந்த முன்னாள் தலைவர் டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதி நிலை அறிக்கை வெளியிட்டு பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏன் என்று சொன்னால் இத்தகைய சிறப்பான பொதுக்கூட்டம் நடைபெறும் இதே நாளில் திருச்சியில் திராவிட இயக்கத்தை வலுமைப்படுத்தி வளர்த்த அன்பிலார் அவர்களின் 31 வது நினைவு தினம் இன்று ஆகும். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் தென்பாண்டி சிங்கம்,எளிமையாக பழகக்கூடிய தங்கம்,  தென் தமிழ்நாட்டின் திமுக கோட்டையாக உருவாகியதில் அதிகம் பங்கு கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. திராவிட கழகம் அரசியலில் கால் பதிக்கலாமா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை எடுக்கக்கூடிய மாநாடு நடைபெற்றது திருச்சியில் தான். அன்றே சொன்னார் அண்ணா அவர்கள் அன்பில் அழைக்கிறார் திருச்சி திருப்புமுனையாக அமையும் என்று. திராவிட இயக்கம் மாபெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் திருச்சியாக அமைந்தது. 




மேலும், திருவெறும்பூர் தொகுதியில் எனக்கு வாக்களித்து 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த உங்களுக்கு நான் சேவகன், என்றும் வேலைக்காரன் நீங்கள் சொல்வதை செய்து முடிப்பவன் நான். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் நான் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ, கழகத்தின் நிர்வாகியாகவோ பேசுவேன். ஆனால் இங்கு திருவெறும்பூர் பேசும்போது உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக நினைத்துக் கொண்டுதான் பேசுவேன். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என்று அவர்களின் பொய்யான வாக்குறுதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தற்போது மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்துள்ளார். அப்போது அவர் பேசுகையில் திமுக அழிந்து விடும் என்று கூறி இருக்கிறார். திமுகவை அழிக்க நினைத்த அனைவரும் அழிந்து போய் உள்ளார்கள் என்பது அவருக்கு தெரியாது. குறிப்பாக நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து நமது குடும்ப பிள்ளைகளான 22 பேர் தற்கொலைக்கு பாஜக அரசு தான் முக்கிய காரணம். தமிழ்நாட்டின் ஆளுநர் மூலமாக தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். மோடிக்கு பயம், அதாவது தோல்வி பயம் வந்ததால் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார் மக்களை சந்திக்கிறார். 




தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல நிச்சயம் வருகின்ற தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்பார்கள். ஒரு இடம் கூட வெற்றி பெறாத சூழ்நிலை உருவாகும். அதே சமயம் நம் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு உரிமை தொகை, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம், மகளிர்க்கு இலவச பேருந்து சேவை, இல்லம் தேடி கல்வி, என்று தினந்தோறும் ஒவ்வொரு புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். நீங்கள் நலமா என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளார். அதன் மூலம் அரசு துறையை சேர்ந்த அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என அனைவரும் தொலைபேசி மூலமாக மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு உரிய தீர்வை காணும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதனால் இனிமேல் மக்கள் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 


அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டை பாஜகவிற்கு விற்று விட்டார்கள். குறிப்பாக மாநில உரிமையை விற்று விட்டார்கள் என்று சொல்லலாம். ஆகையால் பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை தேர்தல் நேரத்தில் செலுத்துவதற்கு முன்பாக, ஏற்கனவே நாம் வாக்களித்து வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று நினைத்து பார்த்து வாக்களிக்க வேண்டும். 




பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை பள்ளிக்கு என்னை நம்பி அனுப்புங்கள், கல்லூரிக்கு அமைச்சர் உதயநிதியை நம்பி அனுப்புங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் இந்த திராவிட மாடல் அரசு அவர்களின் வாழ்க்கை உயர்வதற்கு என்றும் துணை இருக்கும் என்று உறுதியாக கூறுகிறேன். 


ஆகையால் வருகின்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 40/40 நமக்கே என்ற எண்ணத்தில் செயலாற்ற வேண்டும். 


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக அல்லது கூட்டணி சார்ந்த வேட்பாளர்கள் யாரும் நின்றாலும் அந்த இடத்தில் நமது மறைந்த தலைவர் டாக்டர். கலைஞர் வேட்பாளராக நிற்கிறார் என்று நினைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.