நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. மேலும் வீட்டிலேயே கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. தடையை மீறி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்போவதாக பாஜக, இந்து முண்ணனி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்ததன. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு கரூர் வாவுசி தெருவில் அரசின் உத்தரவை மீறி இந்து முன்னணியின் சார்பாக விநாயகர் சிலையை நிறுவி உள்ளனர் என்ற தகவல் கரூர் நகர் காவல்துறையினருக்கு கிடைத்தது. தகவல் கிடைத்த உடன் நகர போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர் அப்போது இந்து அமைப்பினரும் கரூர் நகர போலீசாருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு விநாயகர் சிலை உடைந்தது. இதனை கண்டிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். 




இந்நிலையில் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 5 மணிக்கு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு விநாயகர் சிலை வைப்பதாக இந்து அமைப்பினர் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் குறித்த நேரத்தில் சிலை ஏதும் வைக்கப்படவில்லை காலை 10 மணி அளவில் 12 அடி உயரமுள்ள சிலை ஒன்று ஆலய வாசல் முன்பு நிறுவியுள்ளனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X




இது ஒருபுறமிருக்க கரூர் நகர காவல் ஆய்வாளரை கண்டித்து பாஜகவினர் திரண்டு வந்து கரூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து காலையில் இருந்தே நகரப்பேருந்து சாலையை முற்றிலுமாக இரும்பு தடுப்புகளை கொண்டு போலீசார் அடைத்தனர் அதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 




இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற விநாயகர் சிலை சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டி கரூர் மாவட்ட பாஜகவினர் பேருந்து நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக காவல் நிலையம் வருவதாக தகவல் கிடைத்தது நிலையில் வரும் வழியில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இந்து முன்னணியின் சார்பாக நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலை வழிபாடு செய்த பிறகு ஊர்வலமாக வருவதென முடிவு செய்து பேருந்து நிலையம் வந்தனர்.



50க்கும் மேற்பட்ட பாஜகவினர் தமிழக அரசையும், கரூர் நகர காவல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் சாலையோரம் நின்று போலீசார் பாதுகாப்பு கொடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி இடம் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு காவல் துறை அலுவலகம் முற்றுகை கைவிட்டு வெறும் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்த அனுமதி வழங்கியதாக பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி செய்தியாளரிடம் இதைப் பற்றிக் கூறினார். அப்போது அவர் பேசுகையில் கரூர் நகர காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்யாவிட்டால் கட்சித் தலைமையின் உத்தரவை பெற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.