திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏசிஎல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை  கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். அவர்கள் கடந்த 2012 ம் ஆண்டு காஜமலையில் உள்ள சொத்தினை அடமானம் வைத்து கனரா வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அதற்கான அசல் மற்றும் வட்டியை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர்.


துணை வட்டாட்சியர் மீது தாக்குதல்:


பலமுறை வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் காஜாமலை பகுதியில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு  நேற்று முன்தினம் மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றுள்ளனர். ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் சரமாரியாக அவர்களை தாக்கி உள்ளனர்.




மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மண்டல துணை வட்டாட்சியர் பிரேம் குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன்  திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து திருச்சி மேற்கு வட்டாட்சியர் ராஜவேல் மற்றும் கனரா வங்கி மேலாளர் ஆகியோர் கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


2வது நாளாக தொடரும் தர்ணா:


இந்நிலையில் துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் அவரை தாக்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர்,  பணி புறக்கணித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து 2 வது நாளாக  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வருவாய் துறையினருக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 750 வருவாத்துறையினர் பங்கேற்றுள்ளனர் என தெரிவித்தனர். இந்நிலையில் இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 




கடும் நடவடிக்கை:


இதற்கிடையே இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேசியது..  மண்டல துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 20 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு செய்யபட்டுள்ளது. ஆனால் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 


இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது "வருவாய் துறையினர் ஜப்தி நடவடிக்கைகள் செல்லும் போது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள், அதேபோல நேற்று முன்தினமும்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் வருவதற்கு முன்பாகவே தாக்குதல் சம்பவம் நடைபெற்று உள்ளது. குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் தான் காரணம், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொய்யான நபர்களை கைது செய்யாமல், உண்மையான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.