அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன், இவருக்கு லட்சுமி என்ற மகளும், குணசேகரன் (வயது 35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கூலித்தொழிலாளியான குணசேகரனுக்கும், அதே ஊரை சேர்ந்த மகாராஜனின் மகள் ஜெயந்திக்கும் திருமணமாகி தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் லட்சுமிக்கு திருமணமாகி காட்டுமன்னார்கோவிலில் வசித்த நிலையில், அவரது கணவர் இறந்தபின்னர், ஊருக்கு திரும்பி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு செந்தாமரை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குணசேகரன் மற்றும் அவரது மைத்துனர் சங்கர் ஆகியோர் மீது குவாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில்  நடந்த இந்த வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம்  உத்தரவிட்டது. அப்போது இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் மட்டுமே நீதி மன்றத்தில் ஆஜரானார். ஆனால் குணசேகரன் ஆஜராகவில்லை.

 



 

இதையடுத்து லட்சுமி பல இடங்களில் தேடியும் குணசேகரனை தொடர்பு கொள்ளவோ, பார்க்கவோ முடியாமல் இருந்துள்ளார். ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், குணசேகரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊரில் தகவல் பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 4ஆம்  தேதி லட்சுமி, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தனது தம்பியை பல ஆண்டுகளாக காணவில்லை. அவரது மனைவியான ஜெயந்தியிடம் கேட்டபோது, கேரளாவில் இருப்பதாகவும், அவ்வப்போது போனில் தொடர்பு கொள்வதாகவும், கூறினார். ஆனால் குணசேகரனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது. எனவே எனது தம்பியை கண்டுபிடித்து தர வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் காவல்துறை தனிப்படை அமைத்து ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகவே பேசி வந்தார். பின்னர் மீண்டும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் குணசேகரன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதும், பின்னர் எரிக்கப்பட்டதும் தெரியவந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ஜெயந்தி தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகையில், கொலை வழக்கு காரணமாக எனது கணவர் கேரளாவில் சில காலம் தலைமறைவாக இருந்தார். அப்போது காவல்துறையினர்  அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்துவிட்டு சென்றனர். பின்னர் ஊருக்கு திரும்பிய எனது கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார் என்றார்.

 



 

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதியன்று இரவில் தகராறு செய்தபோது ஆத்திரத்தில் தள்ளிவிட்டதில் அவரது தலையில் அடிபட்டு இறந்துவிட்டார். இதையடுத்து எனது சகோதரி ஜோதி, தந்தை மகாராஜன் ஆகியோர் உதவியுடன் குணசேகரனின் உடலை வீட்டிற்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்துவிட்டோம். பின்னர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்கள் சிலரின் ஆலோசனையின்படி, குணசேகரனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து எலும்புகளை எரித்து சாம்பலை ஏரி தண்ணீரில் கரைத்து விட்டோம். பின்னர் நிம்மதியாக இருந்து வந்தோம், என்று ஜெயந்தி தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர்.

 

இதையடுத்து காவல்துறை ஜெயந்தி (37), கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது அக்காள் ஜோதி (40), தந்தை மகாராஜன் (70) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  மேலும் கணவரை கொலை செய்துவிட்டு, அவர் கேரளாவில் இருப்பதாக நாடகமாடிய பெண் 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.