தஞ்சாவூர்: கணக்கில் வரலையே இந்த பணம் ஏது? எப்படி வந்தது என்ற கேள்வியோடு திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.1.06 லட்சத்தை பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.06 லட்சத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன தகுதி சான்றிதழ் வழங்கும்போது நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது. 

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார் திடீரென சென்றனர்.  பின்னர் அலுவலக கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு சோதனை நடத்தினர். அதில், 2 புரோக்கர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. 

Continues below advertisement

மேலும் ஆர்டிஓ நடராஜனின் காரில் சோதனை நடத்தி ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. இவை கணக்கில் வராத பணமாகும். தொடர்ந்து  ஆர்டிஓ நடராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆர்டிஓவுக்கு ஆதரவாக புரோக்கர் சேதுராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலாவுக்கு ஆதரவாக புரோக்கர் ரமேஷ் ஆகியோர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆர்டிஓ அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சத்துடன் போலீசார் புறப்பட்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்  திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.