கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு கட்டுமானம் மற்றும் புதிய வீடு வாங்குதல் பணிகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எம் சாண்ட், பி சாண்ட் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ப்ளூ மெட்டல், ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் ரூ.3,000 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து கட்டணம் ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எம் சாண்ட் ரூ.4,000 மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம், பி சாண்ட் யூனிட் ரூ.5,000 மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கனிம பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர். 


ஏற்கெனவே தமிழக அரசு பதிவு கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் வரை உயரும். தமிழக அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 




இந்நிலையில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், மாநில  தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை காண்டிராக்டர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரிசங்கு, திருச்சி மைய சேர்மன் சுப்பிரமணி, மாநில செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தன், செயலாளர் சிவக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், திருச்சி செயலாளர் நசுருதீன், பொருளாளர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன், தமிழ்நாடு நெடுஞ்சாலை காண்டிராக்டர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரிசங்கு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஜல்லி, எம்சாண்ட், கிரஷர் டஸ்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு கட்டுமானங்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் கனவு திட்டங்கள் பல முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலை ஏற்றதால் கடுமையான விளைவுகளை சந்தித்து வருகிறோம். எனவே வரும் காலங்களில் டெண்டர்களை தவிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். தமிழகத்தில் ஏறத்தாழ 2000 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.


ஏற்கனவே 50 சதவீத கல்குவாரிகள் மூடப்பட்டு விட்டதால் ஜல்லி, எம் சாண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டு மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. எனவே கட்டுமான பொருட்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஒரு நாள் போராட்டமும், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.