திருச்சி  மாவட்ட ஆட்சியரகத்தில், "உலக எய்ட்ஸ் தினத்தினை" முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் இன்று நடைபெற்றது. மேலும், விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்று, எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் கையொப்பமிட்டு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.


இந்த ஆண்டின் மையக் கருத்தாக "சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்" என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.




மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது :


திருச்சி மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்புப் பணிகள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மூலமாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 35 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர ஹெச்ஐவி பரிசோதனைக்கான உபகரணங்கள் 55 அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இப்பரிசோதனைகளில் நோய்த் தொற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு ஏஆர்டி கூட்டு மருந்து சிகிச்சை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையிலும் உள்ள 2 ஏஆர்டி மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.


இது போன்று 11 துணை ஏஆர்டி மையங்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுவப்பட்டு ஏஆர்டி மருந்துகள் வழங்கப்படுகிறது. எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு CD4 Count, பரிசோதனை மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் செய்யபடுகிறது. ஏஆர்டி சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு (Viral Laod) வைரல் லோட் என்னும் இந்த உயர் பரிசோதனை வருடந்தோரும் 20,000 நபர்களுக்கு மேற்கொள்ளபட்டு வருகிறது. 




மேலும், இது தவிர 8 சுகவாழ்வு மையங்கள், 2 இரத்த வங்கிகள் மற்றும் 4 தொண்டு நிறுவனங்களின் இலக்கு மக்களுக்கான திட்டங்கள் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எ.ச்.ஐ-வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.2000/- முதல் ரூ.5000/- வரை வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வருடம் 283 பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்க ஆவனம் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை மையத்துக்கு வந்து செல்ல இலவச பேருந்து பயணச்சீட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.


மேலும், உழவர் திட்டத்தின்கீழ் ஏஆர்டி சிகிச்சை பெறுவோருக்கு மாதந்தோறும் ரூ. 1000/- உதவித்தொகை, தையல் இயந்திரம், குடும்ப அட்டை (Ration Card) வழங்கப்படுகிறது. இது தவிர பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் உடன் வாழ்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஏஆர்டி சிகிச்சை பெறுவோருக்கு மாவட்ட இலவச சட்ட மையம் மூலமாக சட்ட ஆலோசனை மற்றும் உதவிகள் ஏஆர்டி மையங்களிலேயே கிடைக்க வழி வகைகள் செய்யப்பட்டு உள்ளது.




இத்தகைய சீரிய முயற்சியின் விளைவாக பொது மக்களிடையே 2010 ஆம் ஆண்டில் 1.9 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 0.32 ஆகக் குறைந்துள்ளது. மேலும், கர்ப்பிணி தாய்மார்களிடையே 2010 ஆம் ஆண்டு 0.2 என்ற அளவில் இருந்து தற்போது 0.03 சதவீதமாகக் குறைந்துள்ளது. எச்.ஐவி/எய்ட்ஸ் என்பது மருத்துவம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. சமூகம் சார்ந்த பணி! ஆகவே இவ்வருட மைய கருத்திற்கு இணங்க நாம் அனைத்து சமூகங்களையும் எச்.ஐ.வி தடுப்பு பணியில் ஈடுபடுத்தி பொறுப்புகளை பகிர்ந்துகொண்டு செயல்பட்டால் நோயற்ற சமுதாயத்தை உருவாக்கிட முடியும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து, மண்டல அளவிலான எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும். விழிப்புணர்வு நாடக போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,  பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். விழா முடிவில் உலக எய்ட்ஸ் தினத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் சமபந்தி போஜனம் சிறப்பாக நடத்தப்பட்டது.


இந்நிகழ்வில், சார்பு நீதிபதி (மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு) நசீர்அலி, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) லெட்சுமி, அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் எஸ்.என்.மணிவண்ணன் உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.