தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ,உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே குறுவை சாகுபடியை முன்னிட்டு மேற்கொண்டுள்ள பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பிறகு கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


குறுவை சாகுபடியில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார். இந்த திட்டத்தின் படி, நெல் விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் போன்ற இடுபொருட்களை மானிய விலையில் வழங்க ரூ.50 கோடி, வேளாண் இயந்திரங்கள் வழங்கவும், பண்ணை குட்டைகள் அமைக்கவும் ரூ.11.09 கோடி என்று மொத்தம் ரூ.61.09 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி தற்போது வரை டெல்டா மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கருக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் 90 மெட்ரிக் டன் அளவுள்ள விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உரமானியம் 5700 ஏக்கர் பரப்பளவிலும், பசுந்தாள் உரம் 750 ஏக்கர் அளவிலும் இலக்கீடு பெறப்பட்டு தற்போது 5700 ஏக்கருக்கு மானியத்தில் உரம் வழங்கப்பட்டு இலக்கு நிறைவு செய்துவிட்டதாகவும், பசுந்தாள் உரம் அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.




தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1.50 லட்சம் ஏக்கராக உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியம் பெற உதவி வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர் ஆகியோரால் பரிந்துரை செய்யப்பட்டு தற்போது வரை 46 ஆயிரத்து 751 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்துள்ள 41 ஆயிரத்து 218 விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.


அவற்றில் 37 ஆயிரத்து 666 ஏக்கர் பரப்புடைய 33 ஆயிரத்து 479 பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது வரை 2193 மெ.டன் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏக்கருக்கு ரசாயன உரங்கள் ரூ.2185 வீதம் 47 ஆயிரத்து 700 ஏக்கருக்கும், 100 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் ஏக்கருக்கு ரூ. 1400 வீதம் வழங்குவதற்கு 6 ஆயிரத்து 300 ஏக்கருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு. கடந்த 28ந் தேதி வரையில் 17 ஆயிரத்து 265 ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை தொகுப்பு திட்டம் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.




நாகை மாவட்டத்தில் ரூ.2.89 கோடி மதிப்பில் 4 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 753 விவசாயிகளுக்கு உரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 881 விவசாயிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இடு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்தாண்டு 20 ஆயிரத்து 477 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் 22 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 14 ஆயிரத்து 507 ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் இந்தாண்டு 3.50 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக குறுவை சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விவசாயிகள் அனைவருக்கும் மானியம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.