திருச்சி  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவரும், இலால்குடி சட்டமன்ற உறுப்பினருமான சௌந்திரபாண்டியன்  தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில், நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில்  பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, திருவாடணை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைக்குமார், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, நாகபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த ஆய்வு கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூபாய் 11.70 இலட்சம் மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டாக்களும், தாட்கோ சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 18.86 இலட்சம் மதிப்பீட்டிலான பயனியர் ஆட்டோக்களும், தூய்மைபணியாளர் நல வாரியத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 961 இலட்சம் மதிப்பீட்டிலான வீட்டிற்கான ஆணையும் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 1.60 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணத்திற்கான நிதியுதவியும், 2 பயனாளிகளுக்கு ரூபாய் 24 ஆயிரம் மதிப்பீட்டிலான ஓய்வூதியத்திற்கான ஆணையும் மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூபாய் 58.80 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்திரபாண்டியன் , மாவட்ட ஆட்சியர் தபிரதீப் குமார் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினர்கள் வழங்கினர்.


முன்னதாக, மணப்பாறை வட்டம், மொண்டிப்பட்டியில் TNPL நிறுவனத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்திரபாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கண்ணுடையான் பட்டியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


முன்னதாக. கொட்டப்பட்டு, ஆவின் வளாகத்தில் சுற்றுச்சூலை மேம்படுத்தும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்திரபாண்டியன் , மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்து, மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் வாயிலாக அனைவருக்கும் துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்நிகழ்வுகளில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின் குமார், பழனியாண்டி. தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி. தமிழ்நாடு காகித ஆலை நிருவாக இயக்குநர் டாக்டர் சீனிவாசன், தலைமை பொது மேலாளர் பானு பிரசாத், பொதுமேலாளார் (மனித வளம்) கலைச்செல்வன், நகரப் பொறியாளர் சிவபாதம், திட்ட அலுவலர் சிப்காட் சிவக்குமார் உள்ளிட்ட அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.