பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வினோத் (வயது 28). இவர் பெரம்பலூரில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், அவரது நண்பரான சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்த துரையின் மகன் டிரைவரான கார்த்திக் (25) என்பவரும் நேற்று மாலை நிர்மலா நகரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து இறங்கினர். அவர்கள் வினோத்தையும், கார்த்திக்கையும் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றனர். இதனால் வினோத்தும், கார்த்திக்கும் படுகாயங்களுடன் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக வெவ்வேறு திசையில் ஓடினர். ஆனால் மர்ம கும்பல் பிரிந்து சென்று அவர்களை விடாமல் பின்தொடர்ந்து விரட்டினர்.  இதில் கார்த்திக் அந்தப்பகுதியில் உள்ள தெருக்களில் ஓடி தப்பிவிட்டார். ஆனால் வினோத் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியை கடந்து ஓடிய போது மர்ம கும்பலிடம் வசமாக சிக்கினார். அவர்கள் வினோத்தை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.




மேலும்  படுகாயம் அடைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கார்த்திக்கை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கொலை செய்யப்பட்டு கிடந்த வினோத்தின் உடலை அவரது தாயார் மல்லிகா பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் வினோத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.




இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தது... பெரம்பலூர் தனியார் கல்லூரியில் படிக்கும் இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த ஒரு மாணவரை முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரை சேர்ந்த பிருத்திகைவாசன் தலைமையில் பூவரசன், பப்லு, நவீன், மணி, பிரத்தீஷ் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அந்த கும்பல் நேற்று அந்த மாணவரை அடிக்க முயன்றனர். அப்போது அந்த மாணவர் அவர்களிடம் இருந்து தப்பி வந்து, தனது கூட்டாளிகளான வினோத், கார்த்திக் உள்ளிட்ட 10 பேருடன் சேர்ந்து, மேற்படி கும்பலில் பிரத்தீசை அடித்து மிரட்டி உள்ளனர். இதனை பிரத்தீஷ் தனது கூட்டாளிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 6 பேரும் மது குடித்து விட்டு போதையில் மோட்டார் சைக்கிள்களில் வந்து வினோத், கார்த்திக்கை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் வினோத் உயிரிழந்தார். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் தலைமறைவான அந்த 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். பெரம்பலூர் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செல்போன் கடை ஊழியர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.