நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் மேலும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி மாபெரும் முகாமை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு தடுப்பூசியை சுகாதாரத்துறை சார்பில் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் 5-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது




திருச்சி  மாவட்டத்தில் காலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை 618 இடங்களில் நடந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 95,145 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட  தடுப்பூசி முகாம்கள் மூலம் 18,91,806 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 13,04,325 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 4,42,460 இரண்டாம் கட்ட தடுப்பூசியும் என மொத்தம் 18,91,806  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.




மேலும் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், முகக்கவசங்கள் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும் மாநில அரசு தெரிவித்துள்ளது . மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த பெரும் தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பலரும் இரண்டாம் தவணை தடுப்பூசி செய்து கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள், என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது எனவும் மக்கள் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி கொண்டால் மட்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக கூடும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சிவராசு  தெரிவித்துள்ளார்.