திருச்சி மாநகரில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கபடுகிறார்கள். அதே சமயம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. ஆகையால் திருச்சி மாநகரில் கல்லூரிகள், பள்ளிகள், மத்திய பேருந்துநிலைய பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் மாணவர்களுக்கு விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவலர்களுக்கு  கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.


இதையடுத்து திருச்சி அரியமங்கலம் ரெயில் நகரில் கடந்த சில நாட்களாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததின்பேரில காவல்துறையில் நடவடிக்கை மேற்க்கொண்டனர்.  இதனை தொடர்ந்து அரியமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சூசை ஆரோக்கியராஜும் தனியாக அப்பகுதியில் கண்காணித்து வந்தார்.


இந்தநிலையில் ரயில் நகரை சேர்ந்த முகமது யூசுப் (வயது 46) என்பவர் போதை மாத்திரைகளை மாணவர்களிடம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின்பேரில் காவல்துறையினர் முகமது யூசுப்பை கைது செய்தனர். தொடர்ந்து  அவரிடம் தீவிர விசாரனையை மேற்கொண்டதில்  அவரிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


 




மேலும் இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து  நடத்திய விசாரணையில்  போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டால் போதை இருக்கும் என்று கூறி மாணவர்களிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுபோல மேலும் பலர் போதை மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. விசாரனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, அரியமங்கலம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் அந்த கும்பல் சிக்கியது. அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்த ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த், வடக்கு காட்டூரை சேர்ந்த ஷெப்ரின் ஆகியோரை அரியமங்கலம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, விற்பனைக்காக வைத்திருந்த 1,250 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.





இதனை தொடர்ந்து கண்டோன்மெண்ட் முடுக்குப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் கார்த்திக்ராஜா, கல்லுக்குழியை சேர்ந்த ஜெயராமன், கோகுல், பிரவீன் ஆகியோரை முடுக்குப்பட்டி பகுதியில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 200 போதை மாத்திரைகளையும் கைப்பற்றினர்.  பின்னர் கைது செய்யபட்ட 8 பேரும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள், கஞ்சா, போதை ஊசி , போதை மாத்திரை, ஆகியவற்றை விற்பனை செய்ய கூடாது. இது போன்ற தவறான செயலில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை கடுமையாக எடுக்கபடும் என திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் எச்சரிகை விடுத்துள்ளார்.