தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பு சென்று விட்ட நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இன்று மேற்கொண்டனர்.


தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் இன்று திருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியையும் அவர்கள் காண உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வந்த மாணவர்கள் அனைவரும் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.


இதனை தொடர்ந்து மாணவர்களை  வரவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும் கல்வி சுற்றுலா செல்வது குறித்து அனைவரும் கட்டுரை எழுத வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும், தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை அனைத்து மாணவ- மாணவிகளும் 4 நாள் கல்விச்சுற்றுலாவாக துபாய் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்றுள்ளார். இந்த சுற்றுலா குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், நாங்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.


”எங்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்து தான் எங்களை படிக்க வைக்கிறார்கள். வெளிநாடு செல்வதெல்லாம் எங்களுக்கு கனவு போன்றது. நாங்கள் அதையெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை. தற்போது அது நடக்க போகிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதனை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என்றனர்.




மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் காலை 8 மணியளவில் துபாய் செல்வதற்காக தங்கள் உடைமைகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுடன் ஆசிரியர்களும் வந்திருந்தனர். முதலில் அவர்கள் திருச்சி விமான நிலையம் முனையம் பகுதியில் அமரவைக்கப்பட்டனர். அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்த பின்னர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி காலை 9 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விமானத்தில் புறப்பட்டார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.