மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி நகரில் கடந்த ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி பெறப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. முதலில் சத்திரம் பஸ் நிலையத்தை நவீன வசதியுடன் மேம்படுத்தபட்டது. மேலும்  மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் பூங்கா அமைத்து வண்ண ஒளியுடன் நீரூற்று அமைத்தல், மலைக்கோட்டையை மின் விளக்குகளால் ஒளிரச்செய்தல். போன்ற பணிகள் முழுமையாக முடிக்கபட்டுள்ளது.  மேலும்  தில்லை நகரில் 15 கோடியில் வணிக வளாகம், 17 கோடியில் உய்ய கொண்டான் வாய்க்காலை அழகுபடுத்தும் பணி, 50 கோடியில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை உரமாக மாற்றி அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக  ஸ்மார்ட் சிட்டி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக தொடர்ந்து  பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 




மேலும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்தது.. திருச்சி மாநகராட்சி பகுதியில் கடந்த 2018-ல் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இதில் 83 திட்டப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், சத்திரம் பஸ் நிலையம் மேம்படுத்துதல், தில்லை நகர் வணிக வளாகம், பாதாள சாக்கடை பணிகள், புதிதாக 16 பூங்காக்கள் என மொத்தம் 38 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 45 திட்டப் பணிகளில் காந்தி மார்க்கெட் அருகாமையில் புதிய மீன் சந்தை, இ.பி. ரோடு பகுதியில் 88 லாரிகளை நிறுத்தும் வகையிலான சரக்கு முனையம், புத்தூர் பகுதியில் மேலும் ஒரு வணிக வளாகம், பஞ்சப்பூர் சோலார் பவர் பிளாண்ட் உள்ளிட்ட சில முக்கிய பணிகள் இடம்பெற்றுள்ளது. இதில் புத்தூர் வணிக வளாகம் மற்றும் பஞ்சப்பூர் சோலார் பவர் பிளாண்ட் உள்ளிட்ட சில பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.


சோலார் பவர் பிளாண்ட் பணி முடியும் தருவாயில் இருப்பதாக அதிகாரிகள் உறுதிபட தெரிவித்தனர். இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஐந்தாண்டு காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. கொரோனா பேரிடர் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சத்திரம் பஸ் நிலைய பணிகள் தாமதமானது.




இதனை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  மீதமுள்ள 45 திட்டப் பணிகளை திட்டமிடப்பட்ட 2023 மார்ச் மாதத்துக்குள் செய்து முடிக்கப்படும் என மாநகராட்சி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மழையின் காரணமாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்துக்குப் பின்பு பணிகளைப் துரிதப்படுத்தி முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். திருச்சி ஸ்ம்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழுமையாக முடிந்த பிறகு திருச்சி புதிய தோற்றத்துடன் ஜொலிக்கும் என மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்தார்.