கரூர் மாவட்டத்தில் அமரவாதி ஆற்றின் இடதுகரை வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். ஆண்டாங்கோவில் புதூர், ஆண்டாங்கோவில் கிழக்கு, முனியப்பன்கோவில் அருகே உள்ள கால்வாய் உள்ளிட்ட இடங்களில் நடந்த பணிகளை பார்வையிட்ட அவர், அங்கு நடைபெறும் மராமத்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 




பின்னர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அமராவதி ஆற்றில் இருந்து பாசன வசதி பெறுகின்ற இடதுகரை வாய்க்கால் தூர்வரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அணைப்பாளையத்தில் இருந்து சோமூர் வரை ஏறத்தாழ 44 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் 40 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றது. இப்பணிகள் முடிவுற்ற பிறகு பாசனததிற்காக அமராவதி நீர் வந்து சேரும் அளவிற்கு சிறப்பாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டும் அளவிற்கு இந்தப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தக்கால்வாயின் இரண்டு புறங்களும் கரைகளை பலப்படுத்தி பாசனத்தினை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.




தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி  நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் நிதிநிலை அறிக்கையில் 1.80 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளார்கள். மேலும், கூடுதலாக செய்யப்படவேண்டிய பணிகளுக்கும் உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதற்கான நிதியும் இந்த ஆண்டே பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அமராவதி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய வலதுகரை வாய்க்காலில் செட்டிபாளையத்தில் இருந்து மணவாசி வரை 33 கிலோமீட்டர் தூரத்திற்கு 35 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த தூர் வாரும் பணிகளின் மூலம் மண்மங்கலம், கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 5700 ஏக்கர் நிலம் பாசனம் பெறப்படுகிறது.  இந்நிகழ்வின் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அமராவதி நீர்வடிப்பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




கரூர் நகராட்சியில் தற்போது நாற்பத்தி எட்டு வார்டுகள் உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று நகராட்சி ஆணையர் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்து இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் இப்பணிகள் முடிவு பெறும் எனவும் நாளொன்றுக்கு 8-வார்டு வீதம் ஐந்து நாட்களுக்கு 48 வார்களையும் முடிக்க துரிதமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் 44 கிலோ மீட்டர் சுற்றளவு வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காமல் விவசாயத்திற்கும் இல்ல சேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் தற்போது வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கரூர் நகராட்சியில் ஆணையர் தகவல் தெரிவித்தார்.


கரூர் நகராட்சிக்குட்பட்ட இரட்டைவாய்க்கால் மற்றும் ராஜ வாய்க்கால் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதால் பருவகாலங்களில் பெய்து வரும் தண்ணீரை விவசாயத்திற்கும் வீட்டு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள இந்த வாய்க்கால்கள் உதவ வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.