சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி 40 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு என்ற இடத்தில் பேருந்தின் முன் சக்கரம் அலைவதுபோல தெரிந்துள்ளது.  இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுனர் அரவிந்தன் (49) உடனடியாக பேருந்தை ஓரங்கட்டி பார்த்தபோது முன் சக்கரத்தின் போல்டுகள் ஒவ்வொன்றாக கழன்று கடைசியில் இரண்டு போல்டில் சக்கரம் இயங்கியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக முன் சக்கரத்தை கழற்றி தயார் நிலையில் வைத்திருந்த போல்டுகளை பொருத்தி பேருந்தை இயக்கி சென்றுள்ளார். 


பேருந்து ஓட்டுநரின் சமார்த்தியம்


தனியார் சொகுசு பேருந்து மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் நிலையில் ஓடுபாதையில் சக்கரம் கலண்டு இருந்தால் 40 பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் அதனை முன்கூட்டியே அறிந்து பேருந்தின் முன் சக்கரத்தை கழட்டி மாட்டியதால் 40 பயணிகள் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினர்.  இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தனர்.


மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்..


தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள் தான் அதிகமாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளில் சில வசதிகள் உள்ளது. குறிப்பாக படுக்கை வசதி ,ஏசி மற்றும் குறித்த நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்ற நேரக்கட்டுப்பாடு இவை அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.  ஆகையால்தான் அரசு பேருந்து விட தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் தயங்காமல் பயணம் செய்கிறார்கள்.  அதே சமயம் பல பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடப்பதும் தனியார் பேருந்துகளால் தான் என குற்றம் சாட்டியுள்ளனர். 


பேருந்தை பராமரிக்க வேண்டும்


ஆகையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தை அவ்வப்போவது பராமரிக்க வேண்டும்,  பொது மக்களின் உயிரின் மீது அக்கறை வைத்து பேருந்தை இயக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.  அதேசமயம் அரசும் தனியார் பேருந்துக்களின் வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா அனைத்து ஆவணங்களும் உள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். 


இனிவரும் காலங்களில் இது போன்ற எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக தனியார் பேருந்து உரிமையாளர்களும் மற்றும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.